போர்க்களமான டார்ஜிலிங்- மீண்டும் வெடித்தது கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை!!
கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை முன்வைத்து டார்ஜிலிங்கில் காலவரையற்ற முழு கடை அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
டார்ஜிலிங்: கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை முன்வைத்து டார்ஜிலிங் மலைப் பகுதியில் காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மேற்கு வங்கத்தின் எல்லைப் பகுதியான டார்ஜிலிங்கில் கூர்க்கா இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். தங்களுக்கு கூர்க்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைத்து தர வேண்டும் என்று அம்மக்களின் நீண்டகால கோரிக்கை.
இடைக்கால ஏற்பாடு
இதற்கு இடைக்கால ஏற்பாடாக கூர்க்காலாந்து மாவட்ட தன்னாட்சி கவுன்சில் போன்றவையும் அமைக்கப்பட்டன. இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக இந்த கோரிக்கை அடங்கிப் போயிருந்தது.
வங்கம் கட்டாய பாடம்
இந்நிலையில் மேற்கு வங்க மாநில அரசு, வங்க மொழியை கட்டாய பாடமாக்கியது. இதற்கு கூர்க்காலாந்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நேபாளம் மற்றும் ஆங்கிலத்தை மட்டுமே கூர்க்கா பகுதிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை வெடித்தது.
டார்ஜிலிங்கில் அமைச்சரவை கூட்டம்
மேலும் டார்ஜிலிங்கில் மேற்கு வங்க மாநில அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்தன. இந்நிலையில் மீண்டும் கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கை டார்ஜிலிங் மலைப்பகுதியில் விஸ்வரூபமெடுத்துள்ளது.
காலவரையற்ற போராட்டம்
இக்கோரிக்கையை வலியுறுத்தி டார்ஜிலிங்கில் இன்று முதல் காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.