செங்கோட்டைக்குப் புத்தொளி.. 2500 எல்இடிகளுடன் மின் விளக்கு அலங்காரம்
டெல்லி: சுதந்திர தின விழாவையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பழைய விளக்குகளை எடுத்து விட்டு புதிய எல்இடி விளக்குகளுடன் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 2 மாத காலம் இந்தப் பணி நடந்தது. ஏற்கனவே இருந்த பழைய விளக்குகளை முழுமையாக எடுத்து விட்டு புத்தம் புதிய எல்இடி விளக்குகளால் முன் பக்க சுவர் மற்றும் லகோரி கேட், டெல்லி கேட் ஆகியவை அலங்கரிக்கப்பட்டுள்ளன.
செங்கோட்டையின் முன் பக்க சுவர் விளக்குகளால் அலங்கரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த செங்கோட்டையின் மின் விளக்கு அலங்காரப் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து அதை வெள்ளிக்கிழமையன்று மத்திய கலை மற்றும் பண்பாட்டு துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா தொடங்கி வைத்தார்.
தினசரி இரவு 7.30 மணி முதல் 11.30 மணி வரை இந்த விளக்குகள் எரியும். புதிய விளக்கொளியில் செங்கோட்டை பார்க்கவே படு பிரமிப்பாக உள்ளது.
இந்த விளக்கு அலங்காரப் பணிகளை தேசிய கட்டுமானக் கழகம் ரூ. 3 கோடி செலவில் செய்துள்ளது. செங்கோட்டையின் சுவர்கள் கிட்டத்தட்ட 1.3 கிலோமீட்டர் நீளம் கொண்டவை. அதில் இருந்த பழைய விளக்குகள் அனைத்தும் எடுக்கப்பட்டு புதிய விளக்குகளைப் பொருத்தியுள்ளனர்.
புதிய விளக்கொளியில் இந்த வருட சுதந்திர தின விழா புதுப் பொலிவுடன் செங்கோட்டையில் தொடங்கியுள்ளது. செங்கோட்டை கொத்தளத்தில்தான் பிரதமர் நரேந்தரி மோடி சுதந்திர தின உரை நிகழ்த்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.