தாயின் மணிக்கொடி... தாயின் மணிக்கொடி.. சுதந்திர தினத்தை கொண்டாடத் தயாராகும் மக்கள்!
இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாளை 71-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.
டெல்லி: இந்தியா தனது 71-ஆவது சுதந்திர தினத்தை நாளை கொண்டாடவுள்ளது. அதற்காக பாதுகாப்பு முன்னேற்பாடுகள் கனகச்சிதமாக நடைபெற்று வருகின்றன.
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா நாளை சுதந்திரத் தினத்தை கொண்டாடவுள்ளது. இதற்காக தலைநகர் டெல்லியில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது.
இந்த விழாவையொட்டி, பள்ளிக் குழந்தைகள், முப்படைகளின் வீரர்களும் ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொண்டுவிட்டனர். செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி பேசவுள்ளதால் அந்த இடத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
பாரத் உருவாக்கம்
சுதந்திர தின விழாவுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் முழு சீருடை அணிந்து பாரதம் என்ற வார்த்தையை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுத்து நின்றனர். அந்த மாணவர்கள் உருவாக்கிய அணிவகுப்பில் தேசியக் கொடியும் இடம்பெற்றிருந்தது.
கொடியேற்றுதலும் ஒத்திகை
நாளை செங்கோட்டையில் கொடியேற்றவுள்ளதால் அதன் ஒத்திகை நிகழ்ச்சியாக தேசியக் கொடி செங்கோட்டையில் ஏற்றி பார்க்கப்பட்டது. அப்போது அது கம்பீரமாக காட்சியளித்தது.
மூவர்ணத்தில் வளையல்கள்
சுதந்திர தினத்தையொட்டி ஆண்டுதோறும் பெண்கள் தலைக்கு அணியும் ரப்பர் பேன்ட், பேட்ச், ரிப்பன் என மூவர்ணக் கொடிகளில் விற்பனை செய்யப்படும். இந்த ஆண்டு பழைய டெல்லி பகுதியில் ஒரு கடையில் மூவர்ணக் கொடிகளின் நிறத்தில் வளையல்கள் விற்கப்பட்டன.
விமானப்படை வீரர்கள்
ஒத்திகை நிகழ்ச்சியில் விமானப்படை வீரர்கள் முழு சீருடை அணிந்து கொண்டு அணிவகுப்பு நிகழ்ச்சியை நடத்தினர். மேலும் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை பாதுகாப்பு வீரர் ஒருவர் பைனாகுலரில் கண்காணிக்கிறார்.விழாவையொட்டி செங்கோட்டையே விழா கோலம் பூண்டுள்ளது.