54 ஆப்பிரிக்க நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கும் உச்சிமாநாடு.. டெல்லியில் தொடங்கியது!
டெல்லி: டெல்லியில் இன்று, இந்திய- ஆப்பிரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டு தொடங்கியது. 54 ஆப்பிரிக்க நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.
வர்த்தக ரீதியில் இந்திய-ஆப்பிரிக்க நாடுகளின் உறவுகளை பலப்படுத்தவும், எண்ணெய், எரிவாயுத் துறையில் முதலீடு, கடல் சார்ந்த ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்தவும் டெல்லியில் 4 நாள்கள் நடைபெற உள்ள 3ஆவது வர்த்தக உச்சி மாநாடு, 26ம் தேதி திங்கள்கிழமையான இன்று தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறுகிறது.
54 ஆப்பிரிக்க நாடுகள் கலந்து கொள்ளும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா அல்-சிசி, இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்துள்ளார்.
2008 மற்றும் 2011ம் ஆண்டுகளில் இதுபோன்ற மாநாடுகள் டெல்லி மற்றும் அட்டிஸ் அபாபா நகரங்களில் நடந்துள்ளன. ஆனால், இப்போது போல முன் எப்போதும் 54 நாட்டு முக்கிய பிரதிநிதிகளும் ஒன்றாக சேர்ந்து பங்கேற்கவில்லை. இதில் 40 பேர், அந்தந்த நாட்டின் மத்திய அல்லது மாநில அரசுகளின் தலைமை பதவிகளில் இருப்பவர்கள் என்பது இதில் சிறப்பு.
முக்கியத்துவம் என்ன?: இந்த மாநாட்டால், இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு பரஸ்பர பலன் கிடைக்கும். வணிகத்துறையில் கூடுதல் முதலீடு, பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பு, கடல்படை பாதுகாப்பில் ஒத்துழைப்பு, வறுமை ஒழிப்பு, நோய் ஒழிப்பு, கல்வித்தர மேம்பாடு போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
36 ஆப்பிரி்க்க நாடுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 4 சதவீதமாக வளரும் வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறும் நிலையில், இந்தியா அங்கு முதலீடுகள் செய்ய இது வாய்ப்பாக அமையும்.
அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஏற்கனவே, ஆப்பிரிக்க நாடுகளுடன் மாநாட்டு உறவை மேம்படுத்தியுள்ளன. இந்நிலையில்தான், இந்தியாவும், ஆப்பிரிக்க நாடுகளோடு நெருங்கிக்கொண்டுள்ளது.