ஐ.நா. சீர்திருத்தங்களுக்காக இந்தியா, ஆப்பிரிக்கா இணைந்து குரல் எழுப்ப வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு
டெல்லி: ஐக்கிய நாடுகள் சபையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக இந்தியா, ஆப்பிரிக்கா நாடுகள் இணைந்து குரல் எழுப்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியா- ஆப்பிரிக்கா நாடுகள் இடையேயான 3வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசியதாவது:
இந்தியாவும், ஆப்பிரிக்காவும் மிகவும் பழமை வாய்ந்த நாகரிகங்களைக் கொண்டவை. இந்தியாவும், ஆப்பிரிக்காவும் இளைஞர்கள் நிறைந்த நாடுகள்... மூன்றில் இரு பங்கினர் 35 வயதிற்கும் கீழ் உள்ளவர்கள்.
கலாச்சாரம், வணிக ரீதியாக இந்தியா- ஆப்பிரிக்கா இடையே 100-ஆண்டுகளுக்கும் மேலாக உறவு நீடிக்கிறது. உலகின் மிகச்சிறப்பு மிக்க இடமாக டெல்லி தற்போது மாறிஉள்ளது.
பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஆப்பிரிக்கா முன்னேறி வருகிறது. உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் ஒரே குடையின் கீழ் உள்ளனர்.
உலகில் வாய்ப்புகள் வாய்ந்த இடமாக இந்தியாவும், ஆப்பிரிக்காவும் திகழ்கின்றது. இந்தியாவும் ஆப்பிரிக்காவும் ஒன்றை ஒன்று வளமாக்கி வருகின்றன.
ஆப்பிரிக்காவில் அதிக அளவில் முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. ஆப்பிரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்.
இந்திய சந்தைகளில் 34 ஆப்பிரிக்க நாடுகள் வரிச்சலுகைகளை அனுபவித்து வருகின்றன. ஆப்பிரிக்க நாடுகள் பெண்களை மதிக்கின்றன. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆப்பிரிக்க நாடுகளை இந்தியா பாராட்டுகிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் நாடாளுமன்றங்களில் பெண்கள் அதிகளவில் உள்ளனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை மறு சீரமைப்பு செய்வது தொடர்பான விவகாரத்தில் இந்தியாவும், ஆப்பிர்க்க நாடுகளும் ஒரே கருத்துடன் உள்ளன.
இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் இதற்காக இணைந்து குரல் எழுப்ப வேண்டாம். இந்தியர்களின் இதயமும், ஆப்பிரிக்கர்களின் இதயமும் ஒரே மாதிரி துடிக்கிறது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.