நிலநடுக்கத்தால் "ஆட்டம்" கண்ட இந்திய- ஆப்பிரிக்க உச்சிமாநாடு.. ஆனாலும் தொடர்ந்து நடந்தது
டெல்லி: டெல்லியில் நேற்று தொடங்கிய இந்திய - ஆப்பிரிக்க உச்சி மாநாட்டின்போது நிலநடுக்கம் காரணமாக உறுப்பினர்களிடையே பீதி ஏற்பட்டது. இருப்பினும் மாநாடு நிறுத்தி வைக்கப்படாமல் தொடர்ந்து நடந்தது.
54 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே வட இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய பிராந்தியங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. பல இடங்களில் கட்டடங்கள் ஆடின. கிட்டத்தட்ட ஒரு நிமிடநேர அளவில் இந்த நிலநடுக்கம் நீடித்தது.
இந்திய ஆப்பிரிக்க உச்சி மாநாட்டில் கலந்து கொண்டவர்களும் நிலநடுக்கத்தை உணர்ந்தனர். உறுப்பினர்களிடையே இது பீதியை ஏற்படுத்தினாலும் கூட கூட்டம் நிறுத்தி வைக்கப்படாமல் தொடர்ந்து நடந்தது.
இந்திரா காந்தி இன்டோர் ஸ்டேடியத்தில் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியா இந்த மாநாட்டை நடத்துகிறது.
இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், நிலநடுக்கத்தை மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் உணர்ந்தனர். இருப்பினும் மாநாடு தொடர்ந்து நடந்தது என்றார்.
ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப் பகுதியை மையமாக வைத்து நேற்று பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டு, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பெரும் பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்