4 நாட்கள் சர்வதேச எல்லையில் தவித்த ரோஹிங்கயாக்கள்.. திரிபுரா போலீசில் ஒப்படைப்பு
கவுகாத்தி:ஜம்முவில் இருந்து வங்கதேசம் செல்ல முயன்று, முடியாமல் இந்திய, வங்க தேச எல்லையில் கடந்த 4 நாட்களாக தவித்துக் கொண்டிருந்த ரோஹிங்கயா மக்கள் 31 பேரும் பெரும் அலைக்கழிப்புக்கு பின்னர் திரிபுரா போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.
ஜம்முகாஷ்மீரில் அச்சுறுத்தலுக்கு ஆளான ரோஹிங்கயா மக்கள்31 பேர், தமது நாடான வங்கதேசம் செல்ல முடிவு செய்துள்ளனர். கடந்த ஜனவரி 18ம் தேதி அவர்கள் அனைவரும் வங்க தேச எல்லைக்கு சென்ற போது.. அவர்களை அந்நாட்டு எல்லைப்பாதுகாப்பு படையினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
இந்திய எல்லைப்பகுதியாக வந்ததாக கூறி, அவர்களை வங்கதேச பகுதிக்குள் செல்ல மறுத்து தடைவிதித்தனர். இதையடுத்து, மீண்டும் இரு நாடுகளின் எல்லைப்பகுதியாக வரையறுக்கப்பட்ட பகுதிக்கு வந்தனர்.
வேளாண்நிலத்தில் தவிப்பு
இரு நாடுகளின் எல்லைப்பகுதியாக ராய்முரா எல்லைப்பகுதியில் உள்ள புறக்காவல் சோதனைச்சாவடிக்கு அருகே உள்ள வயல்வெளியில் அவர்கள் அனைவரும் தவித்தனர். 8 வயதுக்குட்பட்ட 16 குழந்தைகள் உள்பட 31 பேரும் எந்த நாடும் ஏற்றுக் கொள்ளவோ.. அனுமதிக்கவோ மறுத்ததால் அந்த வயல் பகுதியிலேயே காத்துக் கிடந்தனர்.
உணவு,தண்ணீர்
அவர்களை என்ன செய்வது என்று எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இந் நிலையில் அந்த ரோஹிங்கயா மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், போர்வைகள் உள்ளிட்டவற்றை மனிதநேய அடிப்படையில் இந்திய எல்லைப்படையினர் உதவிகள் செய்தனர்.
காவல்துறையிடம் ஒப்படைப்பு
இரு நாடுகளும் அவர்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. அதை தொடர்ந்து, கிட்டத்தட்ட 4 நாட்களாக தவித்த அவர்கள் திரிபுரா காவல்துறையினர் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பாஸ்போர்ட் இன்றி வேறு நாட்டுக்கு செல்ல முயன்றது, எல்லை தாண்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
வழக்குப்பதிவு
அதன் பேரில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 6 ஆண்டுளாக ஜம்மு காஷ்மீரில் வசித்து வந்ததாகவும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் சொந்த நாடான வங்கதேசம் செல்ல முயற்சித்தாகவும் கூறினர்.
சர்ச்சையான விவகாரம்
31 ரோஹிங்கயா முஸ்லீம்கள், தமது 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 16 பேருடன் வயல்வெளியில் இரு நாடுகளின் ஆதரவின்றி தவித்தது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகமானது இந்தியாவுக்கு வந்துள்ள ரோஹிங்கயா முஸ்லீம்களை கணக்கெடுத்து.. அவர்களை கண்காணிக்குமாறு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.