அப்போது டோக்லாம்.. இப்போது பன்கோங்.. இந்தியாவுடன் எல்லையில் தொடர்ந்து வம்பிழுக்கும் சீனா
டெல்லி: காஷ்மீர் பிரச்சினையால் இந்தியா மீது நியாயமில்லாத கோபத்தில் இருக்கும் சீனா, தற்போது லடாக் எல்லையில் பிரச்சினை செய்துள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில் இந்த இரு நாடுகளும் காஷ்மீரில் பல்வேறு பகுதிகளை ஆக்கிரமித்துள்ளன.
காஷ்மீரை இந்தியா தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டால் எங்கே தாம் பறித்து வைத்த இடங்கள் பறி போய்விடுமோ என்ற அச்சத்தில் இரு நாடுகளும் சேர்ந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக உலக நாடுகள், சர்வதேச அமைப்புகளில் காய் நகர்த்தி வந்தன.
விமான ஒத்திகை
ஆனால் உலக நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினை என கூறிவிட்டன. இதனால் இரு நாடுகளுமே இந்தியா மீது போர் தொடுக்கும் எண்ணத்தில் லடாக் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்னர் போர் விமான ஒத்திகைகளில் ஈடுபட்டிருந்தன.
கட்டுப்பாட்டில்
இந்த நிலையில் லடாகில் உள்ள பன்கோங் ஏரி விவகாரம் புதிய பிரச்சனையாக வெடித்திருக்கிறது. 134 கி.மீ. நீளமுள்ள இந்த பகுதியில் மூன்றில் 2 பங்கு பகுதியை சீனா தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
பேச்சுவார்த்தை
இதனை சுற்றியுள்ள இடத்திற்கு இந்தியாவும், சீனாவும் உரிமை கோரி வருகின்றன. இந்த நிலையில் நேற்று சீன ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இந்திய வீரர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் மோதல் போக்கு கைவிடப்பட்டது.
இந்தியா- பூடான் எல்லை
எல்லை பிரச்சினைக்காக இந்தியாவை சீனா வம்புக்கிழுப்பது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே கடந்த 2017-ஆம் ஆண்டு டோக்லாம் பிரச்சினையிலும் போர் மூளும் அளவுக்கு சீனா நடந்து கொண்டது. அதாவது இந்தியா- பூடான் எல்லையில் உள்ளது டோக்லாம் பகுதி.
சீனா
பூடானுக்கு சொந்தமான இந்த பகுதியை இந்திய ராணுவ வீரர்கள் பராமரித்து வருகின்றனர். இந்த பகுதியை ஆக்கிரமிக்க சீனா கடுமையாக போராடி வருகிறது. டோக்லாமை கைப்பற்றினால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை எளிதாக கபளீகரம் செய்யலாம் என்பது சீனாவின் திட்டம்.
இந்திய வீரர்கள்
இதனால்தான் டோக்லாம் பகுதியை சீனா ராணுவத்தினர் ஆக்கிரமித்து முகாமிட்டனர். அவர்களை இந்திய வீரர்கள் நீண்ட நாட்கள் போராட்டத்துக்கு பின்னர் விரட்டியடித்தனர்.
எல்லையில் மோதல்
தற்போது லடாக் எல்லையில் பிரச்சினை செய்துள்ளது சீன ராணுவம். அடுத்த மாதம் இந்திய பிரதமரும், சீனா அதிபரும் சந்திக்கும் வேளையில் எல்லையில் சீனா மோதல் போக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.