உங்கள் தூதரகங்களில் இந்தியப் பணியாளர்களுக்கு தரும் சம்பளம் என்ன.. அமெரிக்காவைக் கேட்கிறது இந்தியா
நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூரகத்தில் துணைத் தூதராக பணியாற்றி வரும் தேவ்யானியை நடு ரோட்டில் வைத்துக் கைது செய்து கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றும், உடைகளை களைந்து சோதனையிட்டும், போதைக் கடத்தல்காரர்களுடன் தங்க வைத்தும் மகா அசிங்கமாக நடந்து கொண்டுள்ளது அமெரிக்கா.
அமெரிக்காவின் இந்த செயலால் இந்தியா முழுவதும் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இதுவரை அமெரிக்காவின் செயலுக்கு இந்தியா பெரிய அளவில் எதிர்ப்பு காட்டாமல் இருந்தது. தற்போது இந்திய அரசும் கடுப்பாகி அதிரடி நடவடிக்கைகளில் குதிக்க ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில், அமெரிக்கத் தூதரகங்களில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களுக்கு தரப்படும் சம்பளம் குறித்த விவரத்தை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அது உத்தரவிட்டுள்ளது.
சமையல் காரர்கள், தோட்டக்காரர்கள், பிற பணியாளர்களுக்கு என்ன சம்பளம் தருகிறீர்கள் என்று அமெரிக்காவிடம் விவரம் கேட்டுள்ளது இந்திய அரசு.
சம்பளத்தில்தான் பிரச்சினையே ஆரம்பித்தது
உண்மையில் தேவ்யானி விவகாரமே சம்பளப் பிரச்சினையில்தான் ஆரம்பித்தது. அவர் தனது வீட்டுக்குப் பணியாளராக அமர்த்திய இந்தியப் பெண்ணுக்கு மிகக் குறைவாக சம்பளம் கொடுத்ததைத்தான் பிரச்சினையாக்கி விட்டது அமெரிக்கா.
இதையடுத்து பதிலடியாக தற்போது தனது நாட்டுப் பணியாளர்களுக்கு அமெரிக்கத் தூதரகங்களில் என்ன சம்பளம் தரப்படுகிறது என்று இந்தியா கேட்டுள்ளது.