அமெரிக்க தூதரகங்களில் சினிமா காட்டக்கூடாது: மத்திய அரசு அதிரடி!
விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்பேரில், நியூயார்க் இந்திய துணைத்தூதர் தேவயானி கைது செய்யப்பட்டு, ஆடை அவிழ்த்து சோதனை நடத்தி, அவமதிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் உள்ள அமெரிக்க உயர் தூதரகத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகளை இந்திய அதிகாரிகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக கண்காணித்து வந்தனர்.அமெரிக்க தூதரகத்தில் அரசின் முன் அனுமதி பெறாமல் வெளிநாட்டு படங்கள் திரையிடப்படுகின்றன என்பது தெரிய வந்தது.
இப்படி அனுமதி பெறாமல் திரைப்படங்களைத் திரையிடக் கூடாது என டெல்லியில் உள்ள அமெரிக்க உயர் தூதரகத்துக்கு மத்திய அரசு இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திய அரசின் முன் அனுமதி பெறாமல் டெல்லியில் உள்ள அமெரிக்க உயர் தூதரகத்தில் சினிமா படங்களை திரையிடுவதை வரும் 20-ந் தேதிக்குள் நிறுத்த வேண்டும். 21-ந் தேதிக்கு பின்னரும் திரையிடப்படும் திரைப்படங்களின் படச்சுருள்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.
இதனிடையே டெல்லி அமெரிக்க தூதரகத்துக்கான பாதுகாப்புகளை மீண்டும் மத்திய அரசு பலப்படுத்தி இருக்கிறது. இதற்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.