இந்தியா- ஆஸ்திரேலியா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து
டெல்லி: இந்தியா, ஆஸ்திரேலியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கையெழுத்தானது.
ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அப்போட் மற்றும் பிரதமர் மோடி முன்னிலையில் டெல்லியில் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இந்த ஒப்பந்தம் மூலம், இந்தியாவுக்கு நீண்ட காலத்துக்கு யுரேனியத்தை ஆஸ்திரேலியா வழங்கும். மேலும் அந்த ஒப்பந்தத்தின்படி, ஆஸ்திரேலியாவிடம் இருந்து இந்தியா முதல் முறையாக யுரேனியம் பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலக அளவில் யுரேனியம் ஏற்றுமதியில் மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவிடம், யுரேனியம் வழங்குமாறு கடந்த 2012ஆம் ஆண்டில் இருந்து இந்தியா கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில், இந்தியா கையெழுத்திடாததைக் காரணம் காட்டி, இதுவரை அதற்கு மறுப்புத் தெரிவித்துவந்த ஆஸ்திரேலியா, தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து டோனி அப்போட் கூறுகையில், "யுரேனியத்தை அணு ஆயுதத் தயாரிப்புக்குப் பயன்படுத்த மாட்டோம் என்று இந்தியா உறுதியளித்துள்ளது' என்றார்.
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தீவிரவாதத்தால் இந்தியர்களும், ஆஸ்திரேலியர்களும் பலியாகி வரும் நிலையில், தீவிரவாதக் குழுக்களின் அச்சுறுத்தல், கணினி சார்ந்த பாதுகாப்பு, தீவிரவாதத்தை ஒடுக்குவது ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
பாதுகாப்புக் கூட்டுறவைப் பலப்படுத்துவது, மனிதநேய உதவிகளை மேற்கொள்வது, பேரிடர் மேலாண்மை, அமைதியை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கடற்படைப் பயிற்சியில் இந்தியா பங்கேற்க வேண்டும் என நரேந்திர மோடியிடம் டோனி அப்போட் அழைப்பு விடுத்தார்.
மேலும், முதல் உலகப் போரின் 100ஆவது ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் சார்பில் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது இரு நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்துவதில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.