வாராக்கடன் அதிகரிப்பால் நாட்டின் நிதிநிலை மேலும் சிக்கலாகும் : ரிசர்வ் வங்கி
வாராக்கடன் அதிகரிப்பால் நாட்டின் நிதிநிலை மேலும் சிக்கலாகும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Recommended Video
டெல்லி : வாராக்கடன்கள் அதிகரிப்பால் நாட்டின் நிதி நிலை மிகவும் சிக்கலாகும் என்று மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்களின் தொகை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நிதி ஆலோசகர்கள் ஏற்கனவே கவலை தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் ஒட்டுமொத்த வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக வங்கித் துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது.
2018 மார்ச் மாத இறுதிவரையான வங்கிகளின் வாராக்கடன் 11.6 % அதிகரித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டு இறுதியில் 12.2 % அதிகரிக்கும். வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக வங்கித் துறையின் அழுத்தம் அதிகரித்து வருகிறது.
வங்கிகளின் வாராக்கடன் அழுத்தம் காரணமாக தற்போது 11 பொதுத்துறை வங்கிகள் பிசிஏ சட்டத்தின் படி ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் 2018 மார்ச் மாதத்தில் 21 % அதிகரித்துள்ளது.
இது நடப்பு நிதியாண்டு இறுதியில் 22.3 % அதிகரிக்கும். இந்த 11 வங்கிகள் தவிர மேலும் 6 வங்கிகள் தங்களது மூலதனச் செயல்பாடுகளில் மோசமாக நிலையில் உள்ளன.
பிசிஏ சட்டத்தின் கீழ் ஐடிபிஐ, யூகோ வங்கி, செண்ட்ரல் பேங்க், பாங்க் ஆப் இந்தியா, ஐஓபி, தேனா வங்கி, ஓரியண்டல் வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா, யுனைடெட் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, அலகாபாத் வங்கி என 11 வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
இந்த வங்கிகள் புதிய கிளைகளை திறப்பது, பணியாளர்களை பணியமர்த்துவது உள்ளிட்டவற்றை ரிசர்வ் வங்கி கண்காணிக்கும். வங்கிகளின் லாப விகிதம் குறைந்துள்ளதையும்,சில வங்கிகள் மட்டும் லாபம் ஈட்டியுள்ளன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.