இந்தியாவில் சீன ஆப்பிள்களுக்குத் தடை... மற்ற நாட்டு ஆப்பிள்களுக்கு எப்போது?
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களுக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதே போல் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய ஆப்பிள்களுக்கும் தடை விதிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி: சீனாவில் இருந்து நம் நாட்டிற்கு பழங்கள், பூக்கள் அதிகளவு இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதையடுத்து இப்போது தடைவிதித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
குறிப்பாக சீனாவில் இருந்து ஆப்பிள், பேரிக்காய், வால்நட் கொட்டைகள் உட்படபல தின்பண்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் சீனாவில் இருந்து கப்பல் வழியாக இறக்குமதி செய்யப்பட்ட ஆப்பிள், பேரிக்காய், பூக்களில் பூச்சிகள் தாக்கம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வுகள் செய்து, பூச்சித் தாக்குதலை உறுதிப்படுத்தினர். இதையடுத்து, கப்பல் வழியாக கன்டெய்னர்களில் கொண்டு வரப்பட்ட ஆப்பிள், பேரிக்காய் ஆகியவற்றை அதிகாரிகள் திருப்பியனுப்பினர்.
அதேபோல் சீனாவில் இருந்து பால் மற்றும் பால் பொருட்கள் சார்ந்த இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சீனாவின் ஏற்றுமதி தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்படும் என்று இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.