வி.ஐ.பி வாகனங்களில் சுழலும் சிவப்பு விளக்குக்கு தடை - இந்திய அரசு முடிவு
இந்திய அமைச்சர்கள் தங்கள் கார்களில் சிறப்பு நிற எச்சரிக்கை விளக்குகளை பயன்படுத்துவதற்கு தடை வருகிறது. வரும் மே 1ம் தேதியிலிருந்து இத்தடை அமலுக்கு வரும்.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி "எந்த வாகனத்திலும் சிவப்பு விளக்கு இருக்காது" என்றும், அதில் எந்த "விதி விலக்கும் இருக்காது" என்றும் தெரிவித்துள்ளார்
இந்த புதிய விதியின்படி, அவசர வாகனங்கள், மருத்துவ உதவி ஊர்திகள், தீயணைப்பு வண்டிகள் மற்றும் போலிஸ் வாகனங்கள் ஆகியவை மட்டும் நீல நிற மிளிரும் விளக்குகளை பயன்படுத்தலாம்.
விஐபிகள் தங்கள் அந்தஸ்தை காட்டிக் கொள்வதற்காக இந்த சிவப்பு விளக்குகளைப் பயன்படுத்தி போக்குவரத்து குழப்பங்களை ஏற்படுத்துவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்தஸ்தை பெரிதாக நினைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்கள் அலுவலக நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கடப்பதற்கும் தங்கள் மதிப்பை காட்டுவதற்கும் இந்த சிவப்பு விளக்குகளை பயன்படுத்தி கொள்வதாகவும் குற்றம் சுமத்தபடுகிறது.
"யாரெல்லாம் சிவப்பு நிற விளக்குகளை பயன்படுத்த முடியும் என்பதை நிர்ணயிக்க, மத்திய மற்றும் மாநில அரசுகளை அனுமதிக்கும் சட்டம் நீக்கப்படுகிறது" என ஜெட்லி தெரிவித்தார்.
சாதாரண குடிமக்களைக் காட்டிலும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு மதிப்பு அதிகம் என்பதை போல் காட்டும் இந்தியாவின் "விஐபி கலாசாரத்தை" இது அழிக்கிறது என செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டிவிட்டரில் பிரதமர் நரேந்திர மோதியை பின் தொடருபவர்கள், அரசின் இந்த முடிவு குறித்து எழுப்பும் கேள்விகளுக்கு அவர் பதிலளித்து வருகிறார்.
"இது ஒரு பெரிய ஜனநாயக முடிவு" என மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
2015 ஆம் ஆண்டில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால், தனது காரில் சிவப்பு விளக்கை பயன்படுத்த போவதில்லை என தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், மூத்த நீதிபதிகள் மற்றும் பிற அதிகாரிகள் தங்கள் கார்களில் சிவப்பு விளக்குகளை பயன்படுத்தலாம் என 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.