'காங்கிரஸ் இல்லாத பாரதம்' கோஷத்தை முன் வைத்த மோடிக்கு இப்படி ஒரு சோதனை!
Recommended Video
மும்பை: காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று கோரி கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்த நரேந்திர மோடிக்கு இப்போது அதே பிரச்சார சூடு திருப்பி தாக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரே.
2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், 'காங்கிரஸ் முக்த் பாரத்' என்ற கோஷத்தை முன் வைத்து பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார்.
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பது அவரது பிரச்சாரம்.
ஜனநாயக சவால்
நடுநிலையாளர்கள் இதை கண்டித்தனர். எதிர்க்கட்சி கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்பது, ஜனநாயகத்திற்கு விடுக்கப்படும் சவால் என அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் 21 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக மிசோராம், பஞ்சாப் மற்றும் கர்நாடகாவில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியை எஞ்ச விட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற 3 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் 2 இடங்களில் காங்கிரஸ் டெபாசிட் இழந்தது.
மோடி முக்த் பாரத்
இது ஒருபுறம் எனில், 2019க்குள், 'மோடி முக்த் பாரத்' அதாவது மோடி இல்லாத பாரதம் என்ற கோஷத்தை மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரே முன் வைத்துள்ளார். மும்பையில் நடந்த கட்சி பேரணியொன்றில் இந்த முழக்கத்தை அவர் முன் வைத்தார். நரேந்திர மோடி அரசால் பொய் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளதால் நாடு முழுக்க மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
மூன்றாவது சுதந்திரம்
இந்தியாவுக்கு 1947ல் முதல் முறையாக சுதந்திரம் கிடைத்தது. 1977ல் 2வது முறையாக சுதந்திரம் கிடைத்தது (எமெர்ஜென்சிக்கு பிறகு), 2019ல் 3வது சுதந்திரத்தை பெற வேண்டியுள்ளது. மோடியிடமிருந்து இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்க வேண்டியதுதான். அது. மோடி அரசு விலக்கப்பட்ட பிறகு, பண மதிப்பிழப்பு குறித்து விசாரணை நடத்தினால், சுதந்திர இந்தியா கண்ட மிகப்பெரிய ஊழல் அது, என்பது தெரியவரும்.
வாக்குகளுக்காக ராமர்
பாபர் மசூதி இடிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், இனிமேல் அது தொடர்ச்சியாக பேசப்படும். மத கலவரங்களை உருவாக்க அது பயன்படுத்தப்படும். அயோத்தியில் ராமருக்கு கோயில் வேண்டும் என்பதுதான் நமது ஆசையும். ஆனால், தேர்தலுக்காகவும், மக்களை பிளவுபடுத்தி வாக்குகளை பெறுவதற்காகவும், ராமரை பாஜக பயன்படுத்துவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இவ்வாறு ராஜ்தாக்ரே தெரிவித்தார்.