தேவ்யானி பஞ்சாயத்துக்கு நடுவே.. ரூ. 4000 கோடிக்கு யு.எஸ்ஸிடம் விமானம் வாங்கும் இந்தியா!
டெல்லி: துணைத் தூதர் தேவ்யானி விவகாரம் விஸ்வரூபமாக வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் ரக விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வெள்ளிக்கிழமையன்று பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ரூ.4,000 கோடி மதிப்பில் 6 விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது.
இந்திய விமானப்படை வசம் ஏற்கெனவே சி-130ஜே சூப்பர் ஹெர்குலிஸ் ரக விமானங்கள் 6 உள்ளன. இந்த விமானங்கள் சிறப்பு நடவடிக்கைகளின் போது ராணுவ போக்குவரத்துப் பயன்பாட்டில் ஈடுபடுத்தப்படுகின்றன.
போர்க்காலத்தில் தளவாடங்களையும் இதர பொருள்களையும் அளிக்க மிகவும் உதவிகரமாக இருக்கும். ஏற்கெனவே ரூ. 5,500 கோடி மதிப்பில் 6 விமானங்கள் விமானப்படை பயன்பாட்டுக்காக வாங்கப்பட்டுள்ளன. புதிதாக வாங்கப்பட உள்ள 6 விமானங்கள் மேற்கு வங்கத்தில் சீன எல்லையோரம் உள்ள பனாகர் தளத்தில் நிறுத்தப்படவுள்ளன.