முஸ்லிம்களை சந்தேகத்துடன் பார்த்தால் ஜம்மு-காஷ்மீரை தக்க வைக்க முடியாது: பரூக் அப்துல்லா
ஸ்ரீநகர்: முஸ்லிம்களை சந்தேகத்துடன் தொடர்ந்து பார்த்தால் இந்தியாவால் ஜம்மு காஷ்மீரை தக்க வைக்க முடியாது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சித் தலைவருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
ஸ்ரீநகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பரூக் அப்துல்லா பேசியதாவது:
இந்தியாவில் பெரும் புயல் ஒன்று அபாய மணியை ஒலித்துக் கொண்டிருக்கிறது... இதை நாம் புரிந்து கொள்ளாமல் தொடர்ந்தும் இந்துக்களும் முஸ்லிம்களும் மோதிக் கொண்டிருந்தால் இந்தியாவால் ஜம்மு காஷ்மீரைத் தக்க வைக்க முடியாது. நீங்கள் விரும்பாவிட்டாலும் இதுதான் உண்மை..
முஸ்லிம்கள் இந்த நாட்டின் எதிரிகள் அல்ல. ஆனால் தொடர்ந்து அவர் சந்தேகக் கண்ணோடு பார்க்கப்படுகின்றனர். முஸ்லிம்கள் இந்தியர்கள் இல்லையா? இந்த தேசத்துக்காக எந்த தியாகத்தையும் செய்யவில்லையா?
1947-ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் யுத்தத்தின் போது வீர மரணம் அடைந்த பிரிகேடியர் உஸ்மானை மறந்துவிட்டீர்களா? இந்த நாட்டைக் காப்பாற்றுவதற்கான தன் உயிரைத் தியாகம் செய்தவர் பிரிகேடியர் உஸ்மான்.
இந்த தேசத்துக்காக போராடிய முஸ்லிம் ராணுவ வீரர்களை மறந்துவிட்டீர்களா? ஏன் இன்றும் கூட முஸ்லிம்கள் ராணுவ வீரர்களாக உள்ளார்கள்தானே? முஸ்லிம்களை இந்த நாட்டின் எதிரிகளாக சித்தரிப்பவர்களை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.
முஸ்லிம்களின் இதயத்தில் இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்துக்களும் முஸ்லிம்களும் வெவ்வேறு என்ற கோணத்தில் இந்த தேசத்தை இழுத்துக் கொண்டு போகாதீர்கள்.
மகாத்மா காந்தி, மவுலானா அபுல் கலாம் ஆசாத், சேக் அப்துல்லா, ஜவஹர்லால் நேரு என எண்ணற்ற தலைவர்களால் கட்டமைக்கப்பட்ட இந்தியாவாக தற்போது இல்லை...
என்னுடைய ரத்தம் சிவப்பாக இல்லாமல் பச்சையாகவா இருக்கிறது? இந்துத்துவாதிகள் மற்றும் கிறிஸ்தவர்களின் ரத்தம் வேறாகவா இருக்கிறது? அனைவரது ரத்தமும் சிவப்பாகத்தான் இருக்கிறது...
மும்பை மற்றும் பதன்கோட் சம்பவங்களைப் பற்றி கவலைப்படாமல் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு பரூக் அப்துல்லா பேசினார்.