இந்திய - சீன எல்லையில் அதிகரிக்கப்படும் வீரர்கள்.. போர் பதற்றத்தில் மக்கள்!
இந்திய - சீன எல்லையில் படை வீரர்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
டோக்லாம்: இந்திய - சீன எல்லைப்பகுதியில் இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை குவித்து வருவதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தியா, சீனா, சிக்கிம் எல்லையான டோக்லாம் பகுதிக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அங்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது சீனா.
இதனை இந்தியப் படையினர் தடுத்ததால் இரு படையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைத்தொடந்து சீன ராணுவம் அப்பகுதியில் தனது படைகளை குவித்தது.
அச்சுறுத்தும் சீனா
இந்தியாதான் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய சீனா, இனி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என அச்சுறுத்தியது. மேலும் இந்தியப் படைகள் அங்கிருந்து வெளியேற்றப்படும் வரை பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தது.
போரை நினைவுபடுத்தி மிரட்டல்
இதற்கு கொஞ்சமும் அசராத இந்தியா சீனா தனது படைகளை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியது. இதனை ஏற்க மறுத்த சீனா 1962ஆம் ஆண்டு நடைபெற்ற போரை நினைவுப்படுத்தி பூச்சாண்டி காட்டியது.
வீணாய்போன பேச்சுவார்த்தை
இதைத்தொடர்ந்து இருநாட்டு மேல்மட்ட அதிகாரிகள் டோக்லாம் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
அருணாச்சலப்பிரதேசத்திலும் ஆக்கிரமிப்பு
எப்போது வேண்டுமானாலும் இந்தியா - சீனா இடையே போர் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவி வந்தது. அருணாச்சலப் பிரதேசத்திலும் சீனப் படையினர் ஆக்கிரமிப்பு வேலையில் ஈடுபட்டனர்.
ராணுவ வீரர்கள் குவிப்பு
இந்நிலையில் இந்திய சீன எல்லையில் வழக்கத்தைவிட அதிகமாக வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்திய ராணுவ வீரர்கள் 350 பேர் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் சீனா 1500 வீரர்களை எல்லையில் குவித்துள்ளது.
உச்சக்கட்ட போர் பதற்றம்
இரு நாடுகளும் தங்களின் படை வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு குவித்து வருகின்றன. இதனால் எல்லையில் உச்சக்கட்ட போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.