1962ம் ஆண்டுக்கு பிறகு இந்திய- சீன எல்லையில் பதற்றம்.. படைகள் குவிப்பால் போர் மூளும் அபாயம்
சென்ற 1962ம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நடந்த போருக்குப் பிறகு, இப்போது எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இரு நாடுகளும் போட்டிபோட்டுக் கொண்டு படைவீரர்களைக் குவித்து வருவதால் எப்போது போர் மூளும் என
டெல்லி: கடந்த 1962ம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்த போருக்குப் பிறகு, இப்போது எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இரு நாடுகளும் போட்டிபோட்டுக் கொண்டு படைவீரர்களைக் குவித்து வருவதால் எப்போது போர் மூளும் என்ற அச்சம் எல்லைப் பகுதியில் நிலவுகிறது.
இந்தியா-பூடான்-திபெத் (சீனா) எல்லைகளின் முச்சந்திப்பில் டோகா லா பகுதி உள்ளது. அதன் அருகே லால்டன் என்ற இடத்தில் 2012-ம் ஆண்டு இந்திய ராணுவம் 2 பதுங்கு குழிகளை அமைத்தது.
இந்நிலையில், கடந்த ஜூன் 1-ம் தேதி இந்த 2 குழிகளையும் அகற்றுமாறு சீன ராணுவம் கேட்டுக் கொண் டது. இதையடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவம் உஷார்படுத்தப்பட்டது.
எனினும், 6-ம் தேதி இரவு இந்திய பகுதிக்குள் ஊடுருவிய சீன ராணுவம் புல்டோசர்கள் மூலம் அந்த 2 பதுங்குக் குழிகளையும் சேதப் படுத்தியதுடன், அங்கு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது.
உரிமை கொண்டாடும் சீனா
டோகா லா பகுதி தங்களுக்கு சொந்தமானது என்றும் இந்தியாவுக்கோ பூடானுக்கோ உரிமை இல்லை என்றும் சீனா தெரிவித்தது. இதையடுத்து, அங்கிருந்த இந்திய ராணுவ வீரர்கள் மேற்கொண்டு எந்தப் பணியையும் செய்ய விடாமல் சீன ராணுவத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இருதரப்பு மோதல்
இதையடுத்து அப்பகுதிக்கு அருகே உள்ள முகாமிலிருந்த ராணுவ வீரர்கள் 8-ம் தேதி அங்கு விரைந்து சென்றனர். இதனால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பு வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து இருதரப்பு ராணுவங்களும் எல்லையில் கூடுதல் வீரர்களை குவித்தன.
அத்து மீறியதாக சீனா குற்றச்சாட்டு
மேலும், இந்திய ராணுவம் சீனாவுக்குள் அத்துமீறி ஊடுருவியதாக சீனா குற்றம் சாட்டியது. இதனால் கடந்த ஒரு மாதமாக எல்லையில் பதற்றம் நிலவுகிறது. கடந்த 1962ம் ஆண்டு இந்தியா-சீனா இடையே நடந்த போருக்குப் பின்னர், இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவது இதுவே முதல் முறையாகும்.
எதிர்ப்புக் காட்டும் இந்தியா
இதற்கு முன்பு, கடந்த 2013-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் லடாக் அருகே உள்ள தவ்லத் பெக் ஓல்டி பகுதியில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே அதிகபட்சமாக 21 நாட்கள் மோதல் போக்கு நிலவியது. அப்போது இந்திய பகுதிக்குள் 30 கி.மீ. ஊடுருவிய சீன ராணுவம் தெப்சாங் பகுதிக்கு சொந்தம் கொண்டாடியது. எனினும் இந்திய ராணுவம் காட்டிய கடுமையான எதிர்ப்பு காரணமாக சீனா பின் வாங்கியது.
சர்வதேச எல்லையில் முகாம்
1962 போருக்குப் பிறகு சிக்கிம் மாநிலத்தை ஒட்டிய சீன எல்லையில் இந்திய ராணுவமும், இந்தோ திபெத் எல்லை போலீஸும் (ஐடிபிபி) பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. சர்வதேச எல்லையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் முகாம் அமைக்கப்பட்டது.
வெளியேற சொன்ன சீனாவுக்கு எதிர்ப்பு
இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் கொடி அமர்வு கூட்டம் நடத்தினர். அப்போது, லால்டன் பகுதியிலிருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்று சீனா கேட்டுக் கொண்டது. இதை இந்தியா ஏற்கவில்லை.
யாத்ரீகர்களை மடக்கிய சீனா
இதனிடையே, சிக்கிம் வழியாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த 47 யாத்ரீகர்களுக்கு சீன ராணுவம் அனுமதி மறுத்தது. இதையடுத்து அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர்.
1962ம் ஆண்டு பாடம்
இதனிடையே, சீன ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் வு.கியான் கூறும்போது, "1962-ல் நடந்த போரிலிருந்து இந்தியா பாடம் கற்க வேண்டும்" என்றார். இதற்கு இந்திய ராணுவ தலைமை தளபதி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இப்போது இந்தியா வேற லெவல்
இதுபோல, மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி, "1962-ல் இருந்த நிலை வேறு இப்போது உள்ள நிலை வேறு" என்று பதிலடி கொடுத்தார். இது சீனாவுக்கு மேலும் எரிச்சலை கொடுத்துள்ளது.
டோகா லா சொந்தம் கொண்டாடும் சீனா
எல்லையில் உள்ள டோகா லா பகுதியை டாங்லாங் என அழைக்கும் சீனா, அந்தப் பகுதிக்கு சொந்தம் கொண்டாடுகிறது. இந்தப் பகுதியில் இந்திய ராணுவம் அத்துமீறி ஊடுருவியதாக குற்றம்சாட்டி உள்ளது. இதற்கு ஆதாரமாக 127 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வரைபடத்தையும் சீன வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது.
அரை நூற்றாண்டுக்கு முன்பே ஊடுருவிய சீனா
இந்தியா சீனா இடையே இப்போது ஏற்பட்டுள்ள மோதலுக்கு காரணமான, பூடானுக்கு சொந்தமான டோகா லா பகுதியில் 1966-ம் ஆண்டு சீனா ஊடுருவியது. இதைத் தடுக்க பூடான் இந்தியாவின் உதவியை நாடியது. அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி இதற்கு ஒப்புக் கொண்டார்.
இந்திரா காந்தி பேட்டி
இதையடுத்து 1966-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இந்திரா காந்தி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பூடானை பாதுகாக்க இந்தியா கடமைப்பட்டுள்ளது என பகிரங்கமாக தெரிவித்தார்.
சீனாவுக்கு கண்டனம்
மேலும் சீனாவின் ஊடுருவலுக்கு கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, இந்திரா காந்தி மீது சீனா ஆத்திரமடைந்தது. இதனால் அப்போதும் சிக்கிம் மாநிலத்தை ஒட்டிய சீன எல்லையில் இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவியது. அந்தச் சூழல் இப்போது மீண்டும் உருவாகியுள்ளது.