லடாக் எல்லையில் துப்பாக்கிச் சூடு: இந்தியா-சீனா சிறப்பு பிரதிநிதிகள் விரைவில் பேச்சுவார்த்தை
டெல்லி: லடாக் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்தியா- சீனா சிறப்பு பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லையில் சீனாவின் தொடர்ச்சியான ஊடுருவல்கள், முறியடிப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
அன்று 114 பேரை இழந்த இந்திய ராணுவம்...சுதாரித்தது... சீனாவை வெளுக்கத் தயார்!!
அதிகரிக்கும் பதற்றம்
இந்தியாவில் பதிலடியில் 40 சீன வீரர்கள் இறந்தனர். இதன்பின்னரும் சீனாவின் அத்துமீறல்கள் தொடருகின்றன. இந்த நிலையில் இந்திய படைகளை நோக்கி சீனா துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது எல்லையில் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.
இந்தியா கடும் கண்டனம்
கடந்த 45 ஆண்டுகளில் முதல் முறையாக எல்லையில் சீனா துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது நிலைமையை மோசமாக்கி இருக்கிறது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை இந்தியா வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டது. ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை சீனா கைவிட வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
ரஷ்யாவுக்கு ஜெய்சங்கர் பயணம்
இந்நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரை டெஹ்ரானில் ஜெய்சங்கர் சந்தித்து பேசியிருந்தார்.
இந்தியா- சீனா பேச்சுவார்த்தை
இதனிடையே இந்தியா-சீனாவின் சிறப்பு பிரதிநிதிகள் இடையேயான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ரஷ்யாவின் உதவியுடன் இந்த சிறப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள்.