கைப்பற்றிய மலை சிகரங்களை காலி செய்யுங்கள்.. அலறும் சீனா.. இந்தியா கொடுத்த 'நச்' பதிலடி
ஸ்ரீநகர்: கிழக்கு லடாக்கில் கைப்பற்றிய முக்கிய மலைகளை காலி செய்யுமாறு சீனா இந்தியாவை கேட்கிறது. அதற்கு இந்தியா சீனாவிடம் முதலில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஆக்கிரமிக்கும் முன்பு இருந்த சாலை வரைபடத்தை தர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக கையகப்படுத்திய இந்தியாவின் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் இருந்து சீனா வெளியே போகப்போகிறதா என்பது தெரியவில்லை, ஆனால் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர் பங்கோங் த்சோ ஏரியின் தென் கரையில் உள்ள மலை உச்சி சிகரங்களை இந்தியா காலி செய்ய வேண்டும் என்று சீனா கோருகிறது எனஉயர் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த முறை கார்ப்ஸ் கமாண்டர்-லெவல் பேச்சுவார்த்தையின் போது இதை சீனத் தரப்பு இந்தியாவிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் சீன மக்கள் விடுதலை இராணுவம் தொடர்ந்து இந்திய இராணுவ துருப்புக்களை அச்சுறுத்தி வந்ததால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாங்காங்க் ஏரி பகுதி
பாங்காங்க் ஏரி பகுதியின் பிங்கர் பாய்ண்ட் 8 முதல் 4 வரை சீன ராணுவம் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்ததற்கு பதிலடியாக இந்திய இராணுவம் தந்திரமாக பாங்காங்க் ஏரியின் தென் கரையில் உள்ள மலை சிகரங்களை கைப்பற்றியது. இங்கிருந்து இந்திய வீரர்களை வெளியேற்ற பலமுறை சீனா ராணுவம் அச்சுறுத்தியது. ஆனால் அதில் சீனா தோல்வி அடைந்தது.
இந்தியா அதிரடி
இதனால் தான் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையின் போது இந்திய ராணுவ வீரர்கள் கைப்பற்றி வைத்துள்ள மலை உச்சி சிகரங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியது, இதற்கு பதிலடியாக கிழக்கு லடாக்கில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியை ஆக்கிரமிக்கும் முன்பு இருந்த எல்ஏசி வரைபடத்தை இந்தியா கோரியுள்ளது.
ஏன் பேச்சுவார்த்தை
"எல்லைக்காட்டுப்பாட்டு கோட்டு பகுதி முழுவதும் ஒரு பெரிய கட்டமைப்பைக் கொண்டிருக்கும்போது ஏன் ஒன்று அல்லது இரண்டு இடங்களுக்கு விவாதங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்" என்று இந்திய ராணுவ அதிகாரி கூறியுள்ளார்.. பேச்சுவார்த்தையின் போது டெப்சாங் போன்ற அனைத்து எல்லை பிரச்சனையும் பேச வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது என்றும் அந்த ராணுவ அதிகாரி கூறினார்.
பின்னணி இதுதான்
இந்தியா கைப்பற்றிய மலை சிகரங்கள் சீனாவிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா பாங்காங் ஏரியின் தென் கரையில் முக்கியமான மலைகளான ரெச்சின் லா, ரெசாங் லா மற்றும் முக்பாரி போன்றவற்றை கைப்பற்றியது தந்திரமான யுக்தி என்று பார்த்தால் சிறப்பான நடவடிக்கையாகும். ஏனெனில் அங்கிருந்து சீன கட்டுப்பாட்டில் இருக்கும் ஸ்பாங்கூர் மற்றும் மோல்டா காரிசன் ஆகிய இடங்களில் ஆதிக்கம் செலுத்த முடியும்.
அத்துமீறல்
இதுதான் சீன ராணுவத்திற்கு அச்சத்தை அதிகரித்துள்ளது. இதனால் தான் சீன ராணுவம் அண்மையில் இந்திய எல்லைக்குள் ஆத்திரமூட்டும் செயல்களை செய்து, சட்டவிரோத ஊடுருவல்களையும் செய்தது. அத்துடன் பல ஆண்டுக்கு பிறகு எல்லையில் சீனா துப்பாக்கிச் சூடு நடத்தியது.