ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் இருந்து சீன, இந்தியப் படைகள் வாபஸ்
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளை இந்தியாவும், சீனாவும் திரும்பப் பெற்றன. இதையடுத்து, இரு நாட்டு எல்லை விவகாரங்கள் குறித்து, இரு நாடுகளும் இம்மாதம் 16,17-ந் தேதிகளில் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளன.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜம்மு காஷ்மீரின் கிழக்கு லடாக்கின் சுமர், தெம்சோக் ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு நாட்டுப் படைகளைத் திரும்பப் பெறுவது குறித்து செப்டம்பர் 26, 27ந் தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து, ஸ்பாங்குர் பகுதியில், இந்திய, சீன எல்லை கமாண்டர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது, சுமர், தெம்சோக் ஆகிய பகுதிகளில் இருந்து இரு நாட்டுப் படைகளும் திரும்பப் பெற்றது உறுதி செய்யப்பட்டது,
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.