ஜம்மு காஷ்மீரை இந்தியா ஆக்கிரமித்ததா? புதிய சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ்
ஜம்மு காஷ்மீரை, இந்தியா ஆக்கிரமித்த பகுதி எனக் கூறி காங்கிரஸ் கட்சி மலர் வெளியிட்டுள்ளதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒருபகுதியை, இந்தியா ஆக்கிரமித்த பகுதி எனக் கூறி, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ மலரில் வரைபடம் வெளியானது தேசிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் காங்கிரஸ் கட்சி விழா நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் உத்திரப்பிரதேச பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத், பங்கேற்றார். விழாவில், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து ஆசாத்பேசினார்.
அண்மைக்கால மோடி அரசின் தோல்விகளை பட்டியலிட்ட அவர், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் நல்லுறவை பேண இந்தியா தவறி விட்டதாகவும் கடுமையாகக் குற்றம்சாட்டினார்.
பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் விழா மலரை அவர் வெளியிட்டார். அதில், இடம்பெற்றிருந்த இந்திய வரைபடத்தில் காஷ்மீர், இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என குறிப்பிடப்பட்டிருந்தது.
வழக்கமாக, இந்திய வரைபடத்தில் காஷ்மீரின் ஒரு பகுதியை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி எனக் கூறப்படுவது வழக்கமாகும். ஆனால், தற்போது இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பாஜக கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. 'காங்கிரஸ் மனதார இன்னமும் பாகிஸ்தானுக்கே ஆதரவாக உள்ளது என்பதற்கு இதுவே ஆதாரம்' என, குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் கட்சி 'இந்த மிகப் பெரிய தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்' என, தெரிவித்துள்ளது.
மேலும், 'பா.ஜ.க,வும் தனது இணையத்தில் இதே போன்ற வரைபடத்தை தான் வெளியிட்டுள்ளது. ஆனால் அதனை யாரும் தவறாக கூறவில்லையே' என, காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.