நேபாளத்துக்கு நிதியை குறைத்த நிர்மலா பட்ஜெட்!
- ஆர்.மணி
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய இரண்டாவது பட்ஜெட்டை பிப்ரவரி 2 ம் தேதி தாக்கல் செய்து விட்டார். இந்த பட்ஜெட்டில் பெரியளவில் எந்த தரப்பும் சொல்லக் கொள்ளக்கூடிய எந்த அறிவிப்பும் இல்லை. பட்ஜெட் பற்றி அவரவரும் அவர்களது பார்வையில் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
பட்ஜெட் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று பாஜக வும், இது கதைக்குவாத வளர்ச்சிக்கு வழி வகுக்காத பட்ஜெட் என்று எதிர் கட்சிகளும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒவ்வோர் பட்ஜெட்டும் ஆண்டு தோறும் அந்தந்த அரசுகள் தாக்கல் செய்யும் வெறும் வரவு - செலவு கணக்கு அறிக்கை மட்டுமல்ல, மாறாக சம்மந்தப்பட்ட அரசுகளின் அரசியல் அறிக்கைகளும், பரப்புரைகளும், அரசியல் பிரகடனங்களும் என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த பின்புலத்தில் பார்த்தால் இந்த பட்ஜெட்டில் சுவாரஸ்யமாக ஒரு விஷயம் இருக்கிறது. வெளி நாடுகளுக்கு, குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு ஆண்டுதோறும் இந்தியா கொடுத்து வரும் நிதியுதவியில் செய்யப் பட்டிருக்கும் மாற்றங்கள்தான் அவை. நேபாள நாட்டுக்கு ஒவ்வோர் ஆண்டும் இந்தியா பட்ஜெட்டில் நிதியுதவியை அளித்து வருகிறது. இது பல ஆண்டுகளாக இருக்கும் பழக்கம்தான்.
கடந்த 2019 - 20 ம் ஆண்டு பட்ஜெட்டில் நேபாளத்துக்கு இந்தியா 1,200 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது. ஆனால் நடப்பு 2020 - 21 ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்தியா நேபாளத்துக்கு வெறும் 800 கோடி ரூபாய் தான் ஒதுக்கியிருக்கிறது. 400 கோடி ரூபாயை திடீரென்று இந்தியா குறைத்து விட்டது. இதற்கு முக்கியமான காரணம் சீனாவின் பக்கம் நேபாளம் அதிகமாக சாயத் தொடங்கியிருப்பதுதான் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறத் தொடங்கியிருக்கின்றனர். இந்தியாவின் நிதியுதவி என்பது நேபாளத்துத்தில் நடைபெற்று வரும் பல திட்டப் பணிகளுக்கான உதவியாகும்.
2014 ம் ஆண்டு மோடி அரசு வந்ததிலிருந்தே நேபாளத்துடனான இந்திய உறவில் உரசல்கள் ஏற்படத் தொடங்கின. குறிப்பாக நேபாளம் புதிய அரசியல் அமைப்பு சாசனத்தை ஏற்றுக் கொண்ட போது, அதில் இந்தியாவின் சில முக்கியமான ஆலோசனைகள் இடம்பெறவில்லை. குறிப்பாக 'மாதேசி' சமூகத்தினருக்கு இந்தியா சொல்லியது போன்று சலுகைகள் கொடுக்கப் படவில்லை.
இதனிடையே 2015 ம் ஆண்டில் மாதேசி சமூகத்தினர் மிகப் பெரியளவில் இந்தியா - நேபாள எல்லையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நேபாளத்துக்கு இந்தியாவிலிருந்த போய்க் கொண்டிருந்த கச்சா எண்ணெய், உணவு மற்றும் மருத்துப் பொருட்கள் போவது துண்டிக்கப் பட்டது. இந்த முற்றுகையால் நேபாள மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்த முற்றுகையை இந்தியாவை ஆளும் மோடி அரசுதான் பின்னிருந்து ஊக்குவிக்கிறது என்று நேபாளத்தின் பல அரசியல் கட்சிகளும் வெளிப்படையாகவே குற்றஞ் சாட்டியது குறிப்பிடத் தக்கது.
வெளிநாட்டில் பணியாற்றும் இந்தியர்களுக்கு வருமான வரியா? பட்ஜெட் என்ன சொல்கிறது.. நிர்மலா விளக்கம்!
இதன் காரணமாகவும் வேறு சில காரணங்களாலும் இந்திய - நேபாள உறவில் விரிசல்கள் ஏற்படத் துவங்கின. 2016 ம் ஆண்டு நவம்பர் மாதம் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென்று மோடி அரசு அறிவித்தது. இதுவும் நேபாளத்தை பாதித்தது. ஏனெனில் இந்திய ரூபாய் நோட்டுகள் நேபாளத்திலும் செல்லுப் படக்கூடிய கரன்சிகளாக இருந்ததுதான். இது ஒரு பக்கம் இருக்க கடந்த ஏழு ஆண்டுகளாக சீனா வின் ஆதிக்கம் நேபாளத்தில் சீரான இடைவெளியில் அதிகரிக்கத் துவங்கியதும் இந்திய - நேபாள உறவின் உரசல்களுக்கான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு சென்னை மஹாபலிபுரத்தில் சீன அதிபர் - மோடி சந்திப்பு நடந்தது. தன்னுடைய மூன்று நாள் பயணத்தை இந்தியாவில் முடித்துக் கொண்டு புறப்பட்ட சீன அதிபர் சென்னையிலிருந்து நேரடியாக போனது நேபாளத்துக்குத் தான். இது ஒரு அரசியல் செய்தியாக, இந்தியாவுக்கு சீனாவும், குறிப்பாக நேபாளமும் கொடுத்த அரசியல் செய்தியாகவே பார்க்கப்பட்டது.
ஆகவே இந்த பின்புலத்தில் பார்த்தால் நேபாளத்துக்கு இந்தியாவின் நிதியுதவி கடந்த ஆண்டை விட 400 கோடி ரூபாய் இந்தாண்டு குறைந்திருப்பதை நாம் சரியான கோணத்தில் புரிந்து கொள்ளலாம். ஆனால் நடப்பு பட்ஜெட்டில் இந்தியாவின் மற்றோர் அண்டை நாடான பூட்டானுக்கு இந்தியாவின் உதவி குறையவில்லை. இந்த பட்ஜெட்டில் பூடானுக்கு இந்தியாவின் நிதியுதவி 2,884.65 கோடி ரூபாயாகும். 2014 ம் ஆண்டு முதன் முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர் மோடி பயணம் மேற்கொண்ட முதல் நாடு பூடான்தான் என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
இந்தாண்டு பட்ஜெட்டின் மற்றோர் முக்கியமான அம்சம் ஆப்பிரிக்க கண்டத்துக்கு இந்தியா அளித்து வரும் நிதியுதவியும் குறைக்கப் பட்டதுதான். கடந்த பட்ஜெட்டில் ஆப்பிரிக்க கண்டத்துக்கு இந்தியா 450 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தது. நடப்பு பட்ஜெட்டில் 350 கோடி ரூபாயாக குறைந்து விட்டது. இதுவும் ஆச்சரியமானதாக பார்க்கப் படுகிறது. ஏனெனில் ஆப்பிரிக்க கண்டத்தின் 50 மேற்பட்ட நாடுகளில் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை கடந்த 15 ஆண்டுகளாக சீராக அதிகரித்து வருகிறது. சீனாவின் பல தனியார் நிறவனங்களும், சீன அரசும் பல ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்களை பல்வேறு தொழில்களில் ஆப்பிரிக்க நாடுகளில் முதலீடு செய்துள்ளன.
இந்தியாவின் பல தனியார் நிறுவனங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் முதலீடுகளை செய்திருக்கின்றன. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் பல ஆயிரம் கோடிகளை தொலை தொடர்பு துறையில் ஆப்பிரிகாவில் முதலீடு செய்திருக்கிறது. ஆகவே அந்த பின்புலத்தில் பார்த்தால் ஆப்பிரிகாவுக்கான இந்தியாவின் முதலீடுகள் குறைந்திருப்பது இந்திய தனியார் நிறுவனங்கள் ஆப்பிரிக்க நாடுகளில் வரும் ஆண்டுகளில் செய்ய உத்தேசித்திருக்கும் முதலீடுகளில் தொய்வை ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்களும், தொழில் முனைவோரும் கருதுகின்றனர்.