அதிர்ச்சி.. கொரோனா குணமாகியதாக அறிவித்து டிஸ்சார்ஜ் ஆனவர் பலி.. இந்தியாவில் உயிரிழப்பு 5ஆக உயர்வு
ஜெய்ப்பூர்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிகிச்சை பெற்றுவந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒரு முதியவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் 173 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இதில் ஒருவர்தான் இத்தாலியை சேர்ந்த 69 வயது முதியவர். இவர், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் உள்ள எஸ்எம்எஸ் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்தபோது இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால், நோயிலிருந்து குணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் இதுகுறித்து கூறுகையில், 4 நாட்கள் முன்பு இவருக்கு பரிசோதனை செய்யப்பட்டபோது, கொரோனா குணமடைந்துவிட்டதாக ரிசல்ட் வெளியானது. ஆனால், மறுபடியும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்குதான், அவர் பலியாகியுள்ளார். இவ்வாறு ஏ.என்.ஐ செய்தி தெரிவிக்கிறது.
கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இதற்கு முன்பு தலா ஒரு நோயாளி பலியாகிய நிலையில் ராஜஸ்தானில் இந்த நோய்க்கு முதல் நபர் பலியாகியுள்ளார். இதன் மூலமாக வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.