காஷ்மீர் பிரச்சனை.. பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு.. இந்தியா மறுப்பு
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விடுத்த அழைப்பை இந்தியா நிராகரித்து விட்டது.
ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பேசலாம் என்று சுதந்திர தினத்தன்று இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது. வெளியுறவுத்துறைச் செயலாளர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் பாகிஸ்தான் அழைத்திருந்தது.
ஆனால் இந்தியா இந்த அழைப்பை நிராகரித்து விட்டது. இந்தியாவின் முடிவை, பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் கௌதம் பாம்பவாலா, பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்திற்கு முறைப்படி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இந்தியத் தரப்பில் கூறுகையில், காஷ்மீர் குறித்துப் பேச பாகிஸ்தானுக்கு எந்த அருகதையும், உரிமையும் கிடையாது. வேண்டுமானால் காஷ்மீர் பிரச்சினைக்கு முக்கிய மூல காரணமான எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து வேண்டுமென்றால் பேசலாம். காஷ்மீர் குறித்து பேச ஒன்றுமில்லை என்று இந்தியா பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது.
மேலும் காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து பாகிஸ்தான் கவலைப்படத் தேவையில்லை. காரணம் அது முற்றிலும் இந்தியாவின் உள் விவகாரம். அதில் தலையிட பாகிஸ்தானுக்கு உரிமை கிடையாது என்றும் இந்தியா காட்டமாக தெரிவித்துள்ளது.