தேவயானி மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும் : அமெரிக்காவை வலியுறுத்தும் இந்தியா
விசா மோசடி குற்றம் சாட்டப் பட்டு இந்திய துணை தூதர் தேவ்யானி கோப்ரகடே பொது இடத்தில் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். தூதர் கைவிலங்கிட்டு கைது செய்த அமெரிக்கவை கண்டித்த இந்தியா, உடனடியாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெலை நேரில் வரவழைத்து, இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் நடந்த விவாதத்தின் போது பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், அமெரிக்காவில் இந்திய துணை தூதர் தேவ்யானி கைது செய்யப்பட்ட நடவடிக்கையில் சதி உள்ளது. சதி திட்டத்தில் அவர் சிக்க வைக்கப்பட்டுள்ளார். துணை தூதரின் கவுரவத்தை காக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், ‘எனக்கு நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது நான் வெளியில் சென்றிருந்தேன். அதனால் அந்த அழைப்பை ஏற்க இயலவில்லை. கெர்ரி தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் இருக்கிறார். அந்நாட்டிற்கும் நமக்கும் நேர வித்தியாசம் பெரிய அளவில் இருப்பதால் இன்று மாலைக்குள் கெர்ரியிடம் பேச திட்டமிட்டுள்ளேன்.
தூதர் கைது விஷயத்தில் என்ன நடந்தது என்ற விவரத்தை தான் எதிர்பார்க்கிறேன். தேவையற்ற இம்மாதிரியான நடவடிக்கை இனியும் தொடரக்கூடாது. தற்போது போடப்பட்ட வழக்கையும் திரும்ப பெற வேண்டும் என நான் விரும்புகிறேன். அமெரிக்காவுடனான நம்முடைய உறவு மிகப்பெரிய முதலீடுகளை கொண்டது. இதில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவும் எடுக்கமுடியாது. மிகவும் கவனமுடன் இப்பிரச்சனையை கையாளவேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தூதர் கைது விஷயத்தில் இந்தியா மிகுந்த வருத்தத்தில் உள்ளது என்பதை வெளிப்படித்தும் விதமாகவே கெர்ரியின் அழைப்பை குர்ஷித் புறக்கணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.