என்ன வேண்டுமானாலும் நடக்கும்.. சீன எல்லையில் படைகளை குவித்த இந்தியா.. லடாக்கில் திக் திக் நிமிடங்கள்
லடாக்: லடாக் எல்லையில் இன்று இந்தியா சீனா இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் இந்தியா அங்கு கூடுதல் படைகளை குவித்து வருகிறது.
Recommended Video
இந்தியா சீனா எல்லையில் கடந்த 30 நாட்களாக நீடித்து வந்த பதற்றம் முடிவிற்கு வருமா, அங்கு அமைதி திரும்புமா என்று இன்று தெரிந்துவிடும். சீனா இந்தியா எல்லையில் லடாக் பகுதியில் கடந்த மே 5ம் தேதி சீனா அத்துமீறியது. அப்போதில் இருந்து பதற்றம் நீடித்து வருகிறது.
இதை தணிக்கும் வகையில் இன்று லெப்டினன் ஜெனரல் அதிகாரிகள் இடையே லடாக் எல்லையில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்தியா சார்பாக லெப்டினன் ஜெனரல் ஹரீந்தர் சிங் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதுதான் எங்கள் கோரிக்கை.. நாங்கள் எதற்கும் தயார்.. சீனா உடனான மோதலில் இந்தியாவின் புதிய யுக்தி!
எத்தனை பேர்
இன்று பேச்சுவார்த்தை நடத்த இந்தியா சார்பாக 6 அதிகாரிகள் மட்டுமே செல்கிறார்கள். சீனாவின் சார்பாக மொழிபெயர்பாளர் உட்பட மொத்தம் 5-6 அதிகாரிகள் மட்டுமே வருகிறார்கள். ஆனால் லடாக் எல்லையில் இன்று இந்தியா சீனா இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் இந்தியா அங்கு கூடுதல் படைகளை குவித்து வருகிறது. இன்னொரு பக்கம் சீனாவும் தனது படைகளை எல்லையில் குவித்து வருகிறது.
தொடக்கம் இதுதான்
இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் முழுமையான அமைதி கிடைக்காது. ஆனால் படைகளை திரும்ப பெறுவதற்கான முதல் படியாக இன்று நடக்கும் ஆலோசனை பார்க்கப்படுகிறது . அதே சமயம் இன்று நடக்கும் ஆலோசனை தோல்வியில் முடிந்தால் அது பெரிய சிக்கலாக மாறும். அதன்பின் இந்தியா - சீனா பிரச்சனை தீர்க்க முடியாத நிலையை அடையும். இன்றைய பேச்சுவார்த்தை அதனால் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
கடைசி முயற்சி
ஏற்கனவே பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இன்றைய பேச்சுவார்த்தை கடைசிகட்ட பேச்சுவார்த்தை போலவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய பேச்சுவார்த்தையில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், இந்தியா தனது படைகளை குவித்து வருகிறது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் பதற்றம் அதிகரிக்கும். இதனால் பாதுகாப்பு கருதி படைகள் குவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு முக்கியம்
அதேபோல் சீன அதிகாரிகளை நம்பி இந்திய அதிகாரிகள் இன்று எல்லை வரை செல்கிறார்கள். இதனால் பாதுகாப்பில் கவனமாக இருக்க வேண்டும். இதையும் கருத்தில் கொண்டு படைகள் குவிக்கப்பட்டு உள்ளது. இங்கு தீவிரமாக டிரோன் கேமராக்கள் ரோந்து பணிகளை செய்து வருகிறது. உள்ளூர்களில் உளவு பார்க்கும் வீரர்கள் களமிறங்கி உள்ளனர். லடாக் முதல் அருணாச்சல பிரதேசம் வரை இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
சிக்கிம் நிலை
அதேபோல் சிக்கிம் பகுதியிலும் படைகள் குவிக்கப்பட்டு உள்ளது. 3,488 கி.மீ. தூரத்திலான சீன எல்லைப் பகுதியில் இந்தியா 4000க்கும் அதிகமான வீரர்களை ஆங்காங்கே குவித்து இருக்கிறது.முக்கியமாக பதற்றம் அதிகமாக இருக்கும் கல்வான், பாங்காங் திசோ ஆகிய பகுதிகளில் வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். இங்கு சீனாவும் தனது படைகளை குவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.