4640 இந்தியர்கள் மீட்பு... ஏமனில் மீட்பு பணி நிறைவு... நாடு திரும்பினார் வி.கே.சிங்
டெல்லி: உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஏமனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி நிறைவடைந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
ஏமன் அரசுக்கு எதிராக ஹவுதி புரட்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையில் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டு வருகிறது. இதனால், அங்கு உள்நாட்டுப் போர் தீவிரமாக நடந்து வருகிறது.
எனவே, ஏமனில் சிக்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. நாலாயிரத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மீட்கப் பட்டதைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், ‘இதுவரை ஏமனில் இருந்து 4640 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் நிறைவடைந்துள்ளதையடுத்து, ஏமனில் உள்ள இந்திய தூதரகம் மூடப்படுகிறது' என்றார்.
கடந்த மார்ச் 31ம் தேதி துவங்கிய மீட்புபணியில் 18 இந்திய விமானப்படை சிறப்பு விமானங்கள் மூலம் 2900 இந்தியர்களும், கடற்படை மூலம் 1,670 இந்தியர்களும் மீட்கப்பட்டனர். இந்தியாவின் மீட்புப் பணியில் 41 நாடுகளைச் சேர்ந்த 960 வெளிநாட்டவர்களும் மீட்கப் பட்டுள்ளனர்.
ஏமனில் சிக்கி தவித்த இந்தியர்கள் மீட்கும் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து மத்திய அமைச்சர் வி.கே.சிங் நாடு திரும்பினார்.