வரலாறு திரும்புகிறதா? தேசம் அசாதாரண நிலையை நோக்கி செல்கிறதா?
அரசியல் தலையீடுகளால் நீதித்துறையில் கலகக் குரல் எழுந்திருப்பது என்பது அசாதாரண நிலையை நோக்கி நகரக் கூடிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது,
Recommended Video
டெல்லி: இந்திய நீதித்துறையில் எழுந்திருக்கும் கலகக் குரல் இந்த ஒட்டு மொத்த தேசத்தையே அதிரவைத்துள்ளது. அரசியல் ஒழுங்கற்ற இலங்கை போன்ற நாடுகளில் நடந்தேறும் அசாதாரண நிகழ்வுகள் இந்திய மண்ணிலும் நிகழ்வதும் குடிமக்களை அதிர வைத்துள்ளது.
இந்திய தேசத்தின் இருண்டகாலமான அவசர நிலை எப்படி பிறந்தது என்பதை ஒரு முறை நினைத்துப் பாருங்கள்...
1970களில் இந்திரா தேசத்தின் வலிமை மிக்க பிரதமராக இருந்தார். ஆனால் மத்திய அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே மோதல் இருந்தது. மன்னர் மானிய ஒழிப்பு மசோதாவை அப்போது உச்சநீதிமன்றம் நிராகரித்தது. இதனால் அரசியல் சாசனத் திருத்தம் கொண்டு வந்தார். தமது ஆதரவு நீதிபதிகளுக்கும் பதவி உயர்வு கொடுத்தார் இந்திரா.
நீதித்துறையை தமக்கானதாக மாற்றிக் கொண்டிருந்தார் இந்திரா. இதனால் இருதரப்பு மோதல் நீடித்தது. குஜராத், பீகாரில் மாணவர் இயக்கங்கள் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்றன.
ரயில்வே தொழிலாளர்கள் ஸ்டிரைக்
மாணவர்களுடன் தொழிலாளர்களுடன் கை கோர்த்துக் கொள்ள ஜெயபிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய் தலைமையில் கிளர்ச்சிகள் தொடங்கின. வரலாற்று சிறப்புமிக்க ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்ததை ஜார்ஜ் பெர்னாண்டஸ் நடத்தி காட்டினார்.
அலகாபாத் தீர்ப்பு
இத்தகைய ஒரு அசாதாரண சூழல் தேசத்தில் நிலவிய நிலையில்தான் முறைகேடுகளின் மூலமாக இந்திரா காந்தி பெற்ற தேர்தல் வெற்றி செல்லாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்திராவால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ராஜ் நாராயண் தொடர்ந்த வழக்கில் சாந்தி பூஷண் வாதாடினார். இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் போன இந்திராவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
அவசரநிலை பிரகடனம்
6 ஆண்டுகளுக்கு இந்திரா காந்தி தேர்தலில் போட்டியிட தடை விதித்த அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் இந்திரா காந்தியோ அவசரநிலையை பிரகடனம் செய்து நாட்டையே நாசமாக்கினார். நாடெங்கிலும் அனைத்து துறைகளிலும் ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஓராண்டு காலம் இந்த நிலைமை தலைவிரித்தாடியது. பின்னர் அவசர நிலை பிரகடனம் ரத்தானது. இந்திராவும் தேர்தலில் மண்ணைக் கவ்வினார்.
சோரபுதீன் நீதிபதி மரணம்
இந்த வரலாற்று பின்னணியுடன் 2014-ம் ஆண்டு முதலான நிகழ்வுகளை தொகுத்து பாருங்கள்.. நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து பாஜக படுபலமான எண்ணிக்கையில் ஆட்சியில் உட்காருகிறது. பாஜகவின் இருபெரும் தலைவர்களாக மோடியும் அமித்ஷாவும் திகழ்கின்றனர். அரியாசனத்தில் அமர்ந்த சில மாதங்களிலேயே அமித்ஷா தொடர்புடைய சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கின் நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணித்துப் போகிறார்.
வன்முறை தாக்குதல்கள்
ஒரே நாடு, ஒரே மொழி என்ற கோஷத்துடன் சகலவிதமான திணிப்புகளும் நடந்தேறின. குறிப்பிட்ட சமூகத்தினர் மீதான வன்மம் உக்கிர தாண்டவமாடியது. இந்த மண்ணில் மனிதர்கள் எதைச் சாப்பிட வேண்டும் என்பதைத் தீர்மானிப்போம் என கொக்கரிக்கிறார்கள்.
திடீர் அறிவிப்புகள்
தங்களது கருத்துகளை சுதந்திரமாக தெரிவித்தவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். திடீரென ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு செய்யப்படுகிறது. மக்கள் ஒருவேளை சோற்றுக்கான பணத்தை பெற முடியாமல் வங்கி வாசல்கள் செத்து மடிந்தார்கள்.
அசாதாரண நிலையில்
இப்படியான நிலையில்தான் நீதித்துறையில் மோதல் வெடித்து வீதிக்கு வந்துவிட்டது. அன்று இந்திரா எப்படி நீதித்துறையை தமக்குரியதாக வைத்திருந்தாரோ அதே பாணியில் இப்போது... அமித்ஷா தொடர்புடைய வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மர்மமான முறையில் மரணித்து போனது நீதித்துறையை அதிரவைக்கிறது; தலைமை நீதிபதியாக தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்துக் கொண்டதால் எல்லாமே தடம்புரள்கிறது. மீண்டும் அசாதாரண அரசியல் நிகழ்வு நம் மண்ணில் நடந்தேறக் கூடாது என்பதே நமது தேசத்தின் ஒற்றைப் பிரார்த்தனை!