இலங்கை முஸ்லீ்ம்கள் மீதான சிங்களர் தாக்குதல்... இந்தியாவைப் பாதிக்குமோ என மத்திய அரசு அச்சம்!
டெல்லி: இலங்கையில் முஸ்லீம்கள் மீதான சிங்களர்களின் கலவரம் மற்றும் தாக்குதலால் மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இதை சில "வெளிநாடுகள்" தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு தென் இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களை நடத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அஞ்சுகிறது.
எனவே தற்போது ஏற்பட்டுள்ள பதட்டமான நிலையை தணித்து அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையை இந்தியா கட்டுக் கொண்டுள்ளதாம்.
இந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல்களை ஊக்குவித்து வரும் பாகிஸ்தானைத்தான் இப்படி மறைமுகமாக இந்தியா கூறியுள்ளதாக தெரிகிறது.
முஸ்லீம்கள் ஒதுக்கப்படும் அபாயம்
சிங்கள புத்த வெறியர்களால் முஸ்லீம்கள் சமீபத்தில் பெரும் தாக்குதலுக்குள்ளானார்கள். பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதனால் இலங்கை முஸ்லீ்ம்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இந்த கலவரத்தாலும், மத வெறியாலும், இலங்கையில் முஸ்லீம்கள் ஒதுக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
அன்று தமிழர்களுக்கு நடந்தது
எப்படி தமிழர்களை இனவெறியுடன் சிங்களர்கள் ஒடுக்கினார்களோ அதே போல முஸ்லீம்களையும் சிங்களர்கள் அடக்கி ஒடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இலங்கை முஸ்லீம்களில் குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லீம்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசுபவர்கள்தான்.
தீவிரவாத சக்திகளின் வேட்டைக்காடாகும் அபாயம்
இப்படிப்பட்ட நிலையில் இந்தியாவுக்கு எதிரான போக்கு கொண்ட தீவிரவாத சக்திகளுக்கு இலங்கை ஒரு நல்ல வேட்டைக்காடாக மாறி விடும் அபாயம் இருப்பதாக இந்தியா அச்சமடைந்துள்ளது. இலங்கையில் உள்ள முஸ்லீம்களை தங்களது கைக்குள் போட்டுக் கொண்டு இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் நாச வேலைகளில் சதிகாரர்கள் ஈடுபடலாம் என்று இ்ந்தியா அஞ்சுகிறது.
வெளிநாட்டுத் தூண்டுதல்
இந்தியாவின் அச்சத்தை இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸும் கூட பிரதிபலித்துள்ளார். வெளிநாட்டுத் தூண்டுதலே சமீபத்திய கலவரத்தின் பின்னால் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
சிங்களர்கள் கைது
சமீபத்திய கலவரம் தொடர்பாக 95 சிங்களர்களையும், 24 முஸ்லீம்களையும் போலீஸார் கைது செய்துல்ளனர். மேலும், சிங்கள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகோடா அத்தே ஞானசேராவையும், அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் வித்தரண்டெனிய நந்தாவையும் போலீஸார் விசாரித்துள்ளனர்.
காத்திருக்கும் லஷ்கர் இ தொய்பா
இதற்கிடையே, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு எதிராக அலை அலையாக தீவிரவாதிகளை ஏவிக் கொண்டிருக்கும் லஷ்கர் இ தொய்பாவின் தலைவர் ஹபீஸ் சயீத் அமைதியாக இருக்கிறார். இலங்கை விவகாரம் தொடர்பாக அவர் கருத்து ஏதும் சொல்லவில்லை. இதுவும் கூட இந்தியாவை பதட்டமடைய வைத்துள்ளது. அவரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயும் இணைந்து பெரும் திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தென் பகுதி மட்டும்தான் மிச்சம்
இந்தியாவின் பல பகுதிகளையும் பதம் பார்த்து விட்டது லஷ்கர் இ தொய்பா. தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மட்டும்தான் அது இதுவரை வெறியாட்டம் போட்டதில்லை. எனவே இலங்கை மூலமாக அது தமிழகத்தை குறி வைக்கலாமோ என்ற சந்தேகமும், அச்சமும் அதிகரித்துள்ளது.
காத்திருக்கும் 6 தீவிரவாதிகள்
சமீபத்தில் மத்திய உளவுத்துறை வெளியிட்ட ஒரு எச்சரிக்கைச் செய்தியில், இலங்கை மூலமாக பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற 6 தீவிரவாதிகள் தமிழகம் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சிப்பதாக கூறியிருந்தது. இதையடுத்து தமிழகத்தில் கடலோரப் பகுதிகள் குறிப்பாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.