இந்தியாவிலேயே முதன்முறையாக... மே. வங்கத்தில் கல்லூரி முதல்வராக திருநங்கை நியமனம்
கொல்கத்தா: இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் விவேகானந்தா சதோபர்ஷிகி மஹா வித்யாலயாவில் பெங்காலி மொழி பாடத்தின் இணைப் பேராசிரியராக பணியாற்றி வருபவர் மனாபி பந்தோபாத்பாய் என்ற திருநங்கை. இவர் வரும் ஜூன் 9ம் தேதி கிருஷ்ணா நகர் கல்லூரியில் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். கல்லூரி பணியாளர் தேர்வாணையம் இந்த நியமன உத்தரவை அளித்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கூறுகையில், ‘கல்லூரி முதல்வர் தேர்வை, தேர்வாணையம் வெளிப்படையாக செய்கிறது. இந்த தேர்வு விவகாரத்தில் எல்லாம் அரசு தலையிடாது. எனினும் தற்போது எடுத்துள்ள முடிவு எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது' என்றார்.
மனாபியின் நியமனத்தை அம்மாநிலத்தின் தொழில்நுட்ப கல்வி அமைச்சர் உஜ்ஜால் பிஸ்வாசும் வரவேற்றுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை கல்லூரி முதல்வர் என்ற பெருமையை மனாபி பெறுகிறார். இது தொடர்பாக மனாபி கூறுகையில், ‘எதிர்பார்க்காத பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது. இக்கல்லூரி அமைந்துள்ள கிருஷ்ணா நகரில் இருந்து சிறிது தூரத்தில் தான், 92 வயதான என் தந்தை வசித்து வருகிறார். எனவே அவரை அருகில் இருந்து கவனித்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது' என்கிறார்.