விரைவில், சுற்றுலா விசாவை மாற்றி ஓராண்டு விசா... தஸ்லிமா நஸ்ரினுக்கு ராஜ்நாத் சிங் உறுதி
டெல்லி: இந்தியாவில் ஓராண்டு தங்குவதற்கான விசா விரைவில் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்திருப்பதாக, வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தெரிவித்துள்ளார்.
வங்க தேச பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா ஆகிய நாடுகளில் மாறி, மாறி வசித்து வருகிறார். தற்போது இவர் ஸ்வீடன் நாட்டு குடியுரிமையுடன் இந்தியாவில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், 10 ஆண்டுகளாக தஸ்லிமா நஸ்ரினுக்கு வழங்கப்பட்டு வந்த இந்தியாவில் தங்குவதற்கான அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டு, 2 மாத கால தற்காலிக சுற்றுலா விசாவை வழங்கப்பட்டது.
வங்கதேச எழுத்தாளர்...
இஸ்லாமிய அடிப்படைவாதங்களை எதிர்த்து, அங்கு வாழும் சிறுபான்மை மக்களுக்காகவும் குரல் கொடுத்ததால் வங்கதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை தஸ்லிமாவுக்கு ஏற்பட்டது.
இந்தியா வருகை...
அதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வந்த தஸ்லிமா, கொல்கத்தா நகரில் நீண்டகாலம் வசித்து வந்தார். பின்னர் கொல்கத்தாவில் இருந்தும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டு டெல்லி வந்தார்.
ஸ்வீடன் குடியுரிமை...
பின்னர், டெல்லியில் இருந்தும் அவர் வெளியேற்றப்பட , ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற தஸ்லிமாவுக்கு ஸ்வீடன் நாடு குடியுரிமை கொடுத்தது.
விண்ணப்பம்...
பின்னர் 2004ஆம் ஆண்டு முதல் தஸ்லிமா நஸ்ரின் இந்தியாவில் தங்குவதற்கான அனுமதியை மத்திய அரசு கொடுத்து வந்தது. தற்போது டெல்லியில் வசித்து வரும் தஸ்லிமா, இந்த அனுமதியை மேலும் ஓராண்டுக்கு புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தார்.
சுற்றுலா விசா....
ஆனால் அவரது கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. தஸ்லிமாவுக்கு கொடுக்கக்கப்பட்ட இந்தியாவில் தங்குவதற்கான அனுமதியை ரத்து செய்ததுடன் அவருக்கு 2 மாத கால தற்காலிக சுற்றுலா விசாவை மட்டுமே மத்திய அரசு வழங்கியது.
ராஜ்நாத் சிங்குடன் சந்திப்பு...
இதனைக் கேட்டு அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்த தஸ்லிமா, இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார்.
உறுதி...
இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், ஓராண்டு விசா எவ்வளவு விரைவில் வழங்க இயலுமோ அவ்வளவு விரைவில் வழங்கப்படும் என்று ராஜ்நாத் உறுதியளித்தாக கூறினார்.