பிரசவத்தின்போது தாய்மார்களைத் தாக்கும் டெட்டனஸுக்கு முடிவு கட்டியது இந்தியா: மோடி பெருமிதம்
டெல்லி: பிரசவத்திற்கு முன்பு கர்ப்பமாக இருக்கும்போதும், பிரசவத்திற்குப் பிறகும் இளம் தாய்மார்களைத் தாக்கும் டெட்டனஸ் பாதிப்பு இந்தியாவில் ஒழிந்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இதை அறவே ஒழிக்க இந்தியாவுக்கு டிசம்பர் மாதம் வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள்ளாகவே இதை சாதித்துள்ளோம் என்றும் மோடி கூறியுள்ளார்.
இதன் மூலம் பிரசவத்தின்போதும், பிரசவத்திற்குப் பின்னரும் டெட்டனஸாஸ் சிசுக்கள் இறக்கும் கொடுமைக்கு முடிவு வரும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை...
இந்த சாதனை மூலம் இந்தியா மேலும் பல சாதனைகளை குறித்த காலத்திற்குள் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையும் வந்துள்ளதாக தெரிவித்துள்ள மோடி, பிரசவத்தின்போது ஏற்படும் சிசு மரணங்களுக்கும் இந்தியா விரைவில் முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் தெரிவித்தார்.
மகிழ்ச்சி...
இதுகுறித்து 24 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்த கொண்ட குளோபல் கால் டு ஆக்ஷன் மாநாட்டில் மோடி பேசுகையில், "இந்தியாவின் இந்த சாதனையை இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஐ.நா. இலக்கு...
உலக அளவில் டிசம்பர் மாதத்திற்குள் டெட்டனஸை ஒழிக்க ஐ.நா. இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியா அதை குறித்த காலத்திற்குள்ளாகவே சாதித்துள்ளது. இது எங்களுக்குப் பெரும் நம்பிக்கை தருகிறது.
தொற்றுநோய்கள்...
பல வளரும் நாடுகளில் சுகாதாரமற்ற சூழலில் தான் பிரசவங்கள் நடைபெறுகின்றன. இது தாய்மார்களுக்கும், அவர்களின் சிசுக்களுக்கும் பெரும் அபாயமாக மாறி விடுகிறது. உயிரைப் பறிக்கும் தொற்றுநோய்களுக்கும் இடம் கொடுத்து விடுகிறது.
மருத்துவ பாதுகாப்பு...
குறிப்பாக தூய்மையற்ற பிரசவங்கள், தொப்புள் கொடியில் ஏற்படும் தொற்று போன்றவை உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. டெட்டனஸ் தாக்கும்போது, சிசுக்களின் மரண சம்பவங்களும் அதிகரித்து விடுகன்றன. அதற்கு மருத்துவ பாதுகாப்பு தேவைப்படுகிறது. ஆனால் பல நாடுகளில் அது இல்லை.
டெட்டனஸ் இல்லாத நாடு...
இதை மாற்றி டெட்டனஸ் இல்லாத நாடாக இந்தியாவை தற்போது உருவாக்கியுள்ளோம். இதற்காக மிகப் பெரிய அளவில் நோய்த் தடுப்பு முகாம்களை மிஷன் இந்திரதனுஷ் என்ற பெயரில் இந்தியா ஆரம்பித்தது. இன்று அதை சாதித்துள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்...
1990ம் ஆண்டு 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பது உலக சராசரியான 90ஐ விட அதிகமாக அதாவது 126 சதவீதமாக இருந்தது. 2013ல் அது 49 ஆக குறைந்து விட்டது. உலக சராசரி 46 ஆக உள்ளது" என்றார்.
பாராட்டு...
இந்தியாவின் இந்த சாதனைக்கு ஐ.நா. வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளது. இது மிகப் பெரிய சாதனை, எண்ணற்ற உயிரிழப்புகளை இது தடுக்கும். உலக நாடுகளுக்கும் இந்தியா முன்னோடியாக மாறியுள்ளது என்று ஐ.நா. பிரதிநிதி லூயில் அர்செனால்ட் கூறியுள்ளார்.
37 நாடுகளில்...
தற்போது இந்தியாவையும் சேர்த்து மொத்தம் 37 நாடுகளில் டெட்டனஸ் ஒழிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆப்கானிஸ்தான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சாத், காங்கோ, ஹெய்தி, ஈராக், நைஜீரியா, பாகிஸ்தான், தெற்கு சூடான், ஏமன் என பல நாடுகலில் டெட்டனஸ் இன்னும் ஒழிக்கப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.