சீனாவின் வார்த்தைகளால் கடும் கோபம் அடைந்த இந்தியா.. காஷ்மீர் விஷயத்தில் சீனாவுக்கு கடும் பதிலடி
டெல்லி: இந்திய பகுதிகளை சீனா தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்திருக்கிறது என ஜம்மு காஷ்மீர் விஷயத்தில் இந்தியா கடும் பதிலடி கொடுத்துள்ளது.
நாங்கள் எப்படி பிறநாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட்டு கருத்து சொல்வது இல்லையோ அது போல் சீனாவும் தலையிட்டு கருத்துக்களை வெளியிட கூடாது என இந்தியா கண்டித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இன்று முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிந்து செயல்படுகிறது. இதில் லடாக் பகுதியில் புத்த மதத்தினர் அதிகம் வாழ்கிறார்கள். இந்த பகுதியை சீனா தங்களுக்கு சொந்தமான பகுதி என நீண்ட காலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த விஷயத்தில் இரு நாடுகளுக்கும் இடையே சுதந்திரம் அடைந்தது முதலே பிரச்னை இருக்கிறது.
அந்த இடத்தில் உற்றுப் பார்த்த மக்கள்.. ரவுண்டு கட்டி கலக்கிய பெண்.. இப்படியும் ஒரு விழிப்புணர்வு
சீனா கண்டனம்
இந்நிலையில் இன்று முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து செயல்படுகிறது. இந்தியாவின் இந்த செயலுக்கு சீனா கடும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
சீனாவின் பகுதிகள்
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறுகையில், "ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் என்று அழைக்கப்படுவதை இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் சீனாவின் சில பகுதிகளை அதன் நிர்வாக அதிகார வரம்பில் உள்ளடக்கி இருக்கிறது.
சட்டவிரோதம்
இந்திய அரசின் இந்த செயலை சீனா வெறுக்கிறது மற்றும் உறுதியாக எதிர்க்கிறது. இது சட்டவிரோதமானது மற்றும் செல்லாதது மற்றும் இது எந்த வகையிலும் பயனுள்ளதாக இல்லை, மேலும் அந்த பகுதி சீன உண்மையான கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்ற உண்மை மாறாது. சீனாவின் இறையாண்மையை இந்தியா மதிக்க ஆர்வம் காட்ட வேண்டும். மற்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநிறுத்தவும் இந்தியா ஆர்வம் காட்ட வேண்டும்" என கூறியிருந்தார்.
பதிலடி
இதற்கு இந்தியா சார்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பாக கூறுகையில், "ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. நாங்கள் எப்படி பிறநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு கருத்து சொல்வது இல்லை. அது போல் சீனாவும் தலையிட்டு கருத்துக்களை வெளியிட கூடாது என எதிர்பார்க்கிறோம்" என கண்டித்துள்ளது.
சீனாவுக்கு பதில்
370 வது பிரிவு குறித்த தனது முடிவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அறிவித்த சிறிது நேரத்திலேயே வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார். சிறப்பு நிலையை ரத்து செய்வது ஒரு உள் விஷயம் என்றும், இந்தியாவின் வெளி எல்லைகள் அல்லது எந்தவொரு விஷயத்தையும் பாதிக்கவில்லை என்றும் ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சரிடம் அப்போது திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.