இந்தியா- ஈரானிடையே வர்த்தகம், சாபாஹர் துறைமுகம் உள்ளிட்ட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே வர்த்தகம், சாபாஹர் துறைமுகம் உள்ளிட்ட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
டெல்லி: இந்தியா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கிடையே வர்த்தம் மற்றும் சாபாஹர் துறைமுகம் உள்ளிட்ட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி இந்தியாவில் 3 பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரானில் இருந்து நேற்று முன்தினம் ஐதராபாத் வந்தடைந்த அவர், ஐதராபாத்தில் இஸ்லாமிய கல்வியாளர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.
நேற்று கோல்கொண்டா பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நினைவிடங்களை பார்வையிட்ட அவர், சார்மினார் அருகேயுள்ள பிரபல மெக்கா மசூதியில் நடைபெற்ற 'ஜும்மா' தொழுகையில் பங்கேற்றார்.
இந்நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அப்போது ஈரான் அதிபர் மற்றும் இந்திய பிரதமர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோர் முன்னிலையில் வர்த்தகம் உள்ளிட்ட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது பிரதமர் மோடி கூறுகையில், இரு நாடுகளுக்கிடையே உள்ள நல்லுறவு ரவுஹானி தலைமையில் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.
இரு நாடுகளுடனான வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தொடர்பை அதிகரிக்க விரும்புகிறோம். இரு நாடுகளுக்கிடையேயான கலாசார உறவுகளை வலுப்படுத்த வேண்டும். நிலத்தால் சூழப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானுக்கு சாபாஹர் துறைமுகம் ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
ரயில் இணைப்பு குறித்து வழி வகுக்கப்படும் என்றார் மோடி. ராணுவம், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு மற்றும் ஆற்றல் துறையில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பிராந்திய விவகாரங்கள், அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் விரிவாக பேசினர்.
இரு நாடுகளுக்குமிடையே இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு, விசா தாராளமயம், தேடப்படும் நபர்கள் பரிமாற்றத்தை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவுக்கு வருகை தந்து ஒரு மாதத்தில் ஈரான் அதிபர் ரவுஹானி வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.