சத்தம் இல்லாமல் கைமாறுகிறது...சத்தீஸ்கர் வனப்பகுதி...நிலக்கரி சுரங்கங்கள்...அதானிக்கு தாரைவார்பா?
டெல்லி: சுற்றுச் சூழல் தாக்க வரைவு திட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. ஆனால் இறக்குமதி நிலக்கரி விலை அதிகமாக இருக்கிறது என்ற காரணத்தினால், சத்தீஸ்கர் மாநில வனப் பகுதியில் 4,20,000 ஏக்கர் நிலத்தில் 40 நிலக்கரி சுரங்கங்கள் வெட்டப்பட இருக்கிறது. இந்திய தொழிலதிபர்களுக்கு ஏலம் விடப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சுற்றுச் சூழல் வரைவு அறிக்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி, எங்கு வேண்டுமானாலும், தொழில்களை துவங்கலாம், வனத்தை அழிக்கலாம். ஊருக்குள் கெமிக்கல் தொழிற்சாலை துவங்கலாம் எதற்கும் தடையில்லை. அனுமதி பெற வேண்டியதில்லை. இன்னும் இந்த வரைவு அறிக்கை அமல் ஆகவில்லை. நாடாளுமன்றம் கூடவில்லை. அங்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்தான், அமலுக்கு வர வேண்டும். ஆனால், எப்படி தேசியக் கல்விக் கொள்கை அமல் செய்யப்பட்டதோ அதேபோன்று இதுவும் அமல் செய்யப்படலாம். தற்போது மக்களின் ஆலோசனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
திமுகவிலிருந்து கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கம்... மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை
நிலக்கரி சுரங்கம்
இந்த சந்தடி சாக்கில் தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் பறந்து விரிந்து கிடக்கும் 4,20,000 வனப்பகுதியில் ஏராளமான நிலக்கரி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்கு நான்கு சுரங்கங்களில் மட்டும் 5 பில்லியன் டன் அளவிற்கு நிலக்கரி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சுரங்கங்கள் ஏலம் விடப்படுகிறது. முற்றிலும் வர்த்தக நோக்கம்தான்.
40 சுரங்கங்கள்
தற்போது இந்தியா நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது என்பது மத்திய அரசின் எண்ணம். ஆதலால் கொரோனா தொற்றுக்குப் பின்னர் உள்நாட்டிலேயே நிலக்கரி உற்பத்தி பெரிய அளவில் செய்ய திட்டமிட்டுள்ளது. சத்தீஸ்கர் வனப்பகுதியில் 40 சுரங்கங்கள் எழுப்படுகிறது.
மத்திய அரசு பட்டியல்
பிரதமர் மோடிக்கு நெருக்கமானவராக கருதப்படும் தொழிலதிபரும், தற்போது நாட்டிலேயே நிலக்கரி மின் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் கவுதம் அதானிக்குத்தான் இந்த சுரங்கங்கள் தாரை வார்க்கப்படும் என்று கூறப்படுகிறது. இவரது பெயர்தான் மத்திய அரசின் பட்டியலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 மாநிலங்கள்
இங்கு நிலக்கரி சுரங்கம் வெட்டுவதற்கு பெரிய அளவில் ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இந்தப் பகுதி மரங்கள் அடர்ந்த வனப்பகுதி, உள்நாட்டு மக்களுக்கு வாழ்விடமாக இருந்து வருகிறது. விலங்குகள் வசிக்கின்றன. அப்படி இருக்கும் வனப்பகுதியை ஏலம் விடுவதா என்ற எதிர்ப்பு காரணமாக முளைத்ததுதான் சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை. இந்த வனப்பகுதி மகாராஷ்டிரா, ஜார்கண்ட், சத்தீஸ்கர், மேற்குவங்கம் என்று விரிந்து கிடக்கிறது. மகாராஷ்டிராவில் இருக்கும் தடோபா புலி சரணாலயமும் இந்தப் பட்டியலுக்குள் வருகிறது. ஏற்கனவே இதற்கு எதிர்ப்பு கிளம்ப, பட்டியலில் இருந்து இந்த இடம் மட்டும் நீக்கப்பட்டு இருக்கிறதாம்.
வெப்பம் அதிகம்
சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ஆதிவாசிகள் அமைப்பைச் சேர்ந்தவரும், பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவருமான அமரா என்பவர் கடிதம் எழுதி இருந்தார். அந்தக் கடிதத்தில், ''இனிமேல் இந்தப் பகுதியில் சுரங்கம் வெட்டப்பட்டால் உயிரை விடுவேன் என்று எழுதி இருந்தார். இதற்கு முன்பாக 2011ல் அங்கு, இரண்டு நிலக்கரி சுரங்கங்கள் வெட்டப்பட்டன. அவற்றால், சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்றும், வெப்பம் அதிகமாக இருக்கிறது என்றும், சத்தம் அதிகமாக இருக்கிறது என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மரங்கள் வெட்டப்படும்
இன்னும் அதிகமான சுரங்கங்கள் வரும்பட்சத்தில் இங்கு ஐந்து கிராமங்கள் அழிக்கப்படும். 6000 பேர் இடமாற்றலுக்கு உள்ளாவர்கள். ஆயிரக்கணக்கான ஏக்கரில் இருக்கும் மரங்கள் வெட்டப்படும், சாலை அமைக்கப்படும். இதுகுறித்து சமீபத்தில் பேசி இருந்த ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரஸ், ''எந்த நாடும் பொருளாதாரத்தை மீட்க நிலக்கரியை இணைப்பது எந்த நாட்டுக்கும் சரியான காரணமாக இருக்காது'' என்று தெரிவித்து இருந்தார். ஆனால், இந்தியா இழந்த பொருளாதாரத்தை மீட்க நிலக்கரி சுரங்கங்களை வெட்டுவதற்கு தயாராகிவிட்டது.
மின் தேவை குறையும்
உலகிலேயே அதிக நிலக்கரி ஏற்றுமதி நாடாக இந்தியா ஏன் இருக்கக் கூடாது என்று பிரதமர் மோடி ஏற்கனவே பேசி இருந்தார். உலகிலேயே இன்று நிலக்கரி இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 247 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் மதிப்பு 20 பில்லியன் டாலராக இருக்கிறது. கொரோனா காரணாமாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் மின் தேவையும் 15 சதவீதம் குறையும் என்று தெரிய வந்துள்ளது. சமீபத்தில் எடுத்த ஆய்வின்படி, 2030 ஆண்டில் இருக்கும் எதிர்பார்க்கப்பட்ட தேவையை விட 20 சதவீதம் கூடுதலாக நிலக்கரியை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்று தெரிய வந்துள்ளது.
வேலை வாய்ப்பு
ஏன் இந்தியா சூரிய மின் சக்தியில் ஈடுபடக் கூடாது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சமீபத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையத்தை மத்தியப்பிரதேசத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். நிலக்கரி சுரங்கம் ஏற்படுத்துவதற்கு ஆகும் செலவைவிட 14 சதவீதம் குறைவாகத்தான் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க தேவைப்படும். 2022ல் 1.6 மில்லியன் வேலை வாய்ப்பை சூரிய மின் உற்பத்தி திட்டம் ஏற்படுத்தும் என்று தெரிய வந்துள்ளது.
Recommended Video
நோ கோ ஏரியா
மத்திய அரசின் இந்த திட்டத்தை முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் கண்டித்துள்ளார். ''முன்பு ''நோ கோ'' பகுதியாக இருந்த 30 சதவீதப் பகுதி மோடி பிரதமராக வந்த பின்னர் 5 சதவீதமாக குறைந்துள்ளது. அதானிக்கு இந்த சுரங்கங்கள் செல்ல உள்ளன. அவர்தான் தற்போது அரசுக்கு நெருங்கியவராக இருக்கிறார். உலக அரங்கில் சுற்றுச்சூழல் சாம்பியனாக பிரதமர் மோடி திகழ்கிறார். ஆனால், உள்நாட்டில், மொத்தமாக விதிகளை தளர்த்தியுள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.