அமைதியே வேண்டும்.. தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை...
டெல்லி : அமைதியே இந்தியாவின் இலக்கு என்றும், ஆனால் தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில், இதனை மீறும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த இரு வாரங்களாக இந்த தாக்குதல் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. நவுகாம் பகுதியில் நடந்த இரு சம்பவங்களில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் கொல்லப்பட்டனர். சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் நேற்றில் இருந்து இத்தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.
ஜம்மு அருகே அக்னூர் செக்டார் பகுதியில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே கனாசக் என்ற இடத்தில் உள்ள இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான் படையினர் எல்லைப்பகுதியில் உள்ள கிராமங்களை குறிவைத்து தாக்கினர். இந்த தாக்குதலில் பாலிதேவி என்ற பெண் பலியானார். மேலும் பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்திய பிறகு
பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் குறித்து டெல்லியில் இந்திய வெளிவுறவு செயளாலர் ஜெயசங்கர் கூறியதாவது..
இந்தியாவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் கூறுவது தவறான தகவல். அந்த விமானம் சீனாவில் வடிவமைக்கப்பட்டதைபோன்று தெரிகிறது. தற்போது எல்லை பகுதியில் நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது.
நாங்கள் அமைதியைத்தான் விரும்புகிறோம். அதுதான் எங்கள் இலக்கும் கூட. எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் தகுந்த பதிலடி கொடுப்போம்"
இவ்வாறு வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.