முதல் முறையாக இன்று விண்ணில் பாய்கிறது அதிக எடைகொண்ட ஜி.சாட்-19 தகவல் தொடர்பு சேட்டிலைட்!
முதல் முறையாக அதிக எடைகொண்ட ஜி.சாட்-19 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டா: முதல் முறையாக அதிக எடைகொண்ட ஜி.சாட்-19 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இந்த செயற்கைக்கோள் இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்கிறது
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ இதுவரை குறைவான எடைகொண்ட செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமும், 2 முதல் 2½ டன் எடைகொண்ட செயற்கைகோள்களை ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமும் விண்ணில் செலுத்தி வருகிறது.
அதிக எடைகொண்ட செயற்கைகோள்கள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன் வகை ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இதை மாற்றியமைக்கும் விதமாக கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் செயல்படும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டை இஸ்ரோ உள்நாட்டிலேயே தயாரித்து இருக்கிறது.
முதல் முறையாக பயணம்
இந்த ராக்கெட் இன்று முதல் முறையாக இன்று விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று ஜி.சாட்-19 தகவல்தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.
3,136 கிலோ எடை
மாலை 5:28 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட்டை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இதில் எடுத்து செல்லப்படும் ஜி.சாட்-19 தகவல் தொடர்பு செயற்கைகோள் 3 ஆயிரத்து 136 கிலோ எடைகொண்டது.
நேற்று தொடங்கிய கவுன்ட்டவுன்
இதன் 25½ மணி நேர ‘கவுன்ட்டவுன்' நேற்று மாலை 3:58 மணிக்கு தொடங்கியது. கவுன்ட்டவுன் தொடங்கியதில் இருந்து ராக்கெட்டின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ள நேரத்தில், வானிலை நிலவரம், காலநிலை மாறுபாடு எவ்வாறு இருக்கும் என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நவீன வசதிகளுடன்
நவீன வசதிகளுடனான தகவல் தொடர்பு வசதிகளை கொண்டு உள்ளது. இது பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுட்காலம் 10 ஆண்டுகள்
பூமியில் இருந்து இந்த செயற்கைகோள் குறைந்தபட்சம் 179 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சமாக 35 ஆயிரத்து 975 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தப்படும். இதில் 4 ஆயிரத்து 500 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள், 2 ஆன்டெனாக்கள், சூரிய தகடுகள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.