இந்தியா, அகதிகளுக்கான தலைநகரம் கிடையாது.. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்
அகதிகளுக்கான உலக தலைநகரமாக இந்தியா மாறுவதை விரும்பவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது
டெல்லி: ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்த வழக்கு ஒன்றில் பதிலளித்துள்ள மத்திய அரசு, அகதிகளுக்கான உலக தலைநகரமாக இந்தியா மாறுவதை விரும்பவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது
மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறிவைத்து கொத்து கொத்தாக கொள்ளப்படுவதாகவும், மியான்மர் ராணுவத்தின் இந்த கொடூர செயலிலிருந்து அப்பாவி ரோஹிங்கியா முஸ்லிம்கள் தப்பித்து அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். மியன்மர் நாட்டின் எல்லையில் கிரனேட் தாக்குதல், கன்னிவெடித்தாக்குதல், மிளகாய்ப்பொடித் தூவல் தாக்குதல் ஆகியவற்றிலிருந்து தப்பித்து ரோஹிங்கிய முஸ்லிம்கள் நாடு நாடாக அகதிகளாக தங்கி வருகின்றனர்.
இதுவரை இந்தியாவில் இவ்வாறு பல நூற்றுக்கணக்கானோர் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு எல்லைக்கு வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களை பாதுகாப்புப் படையினர் மியன்மர் வீரர்களை செய்யும் அதே தாக்குதல்களை பின்பற்றி திருப்பி அனுப்பிவிடுவதாக உச்ச நீதிமன்றத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் சார்பில் மனு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, அகதிகளின் உலகத் தலைநகரமாக இந்தியா மாறுவதை விரும்பவில்லை என்றும், பல பிரச்சனைகளாலும், உள்நாட்டு கலவரங்களாலும் ஒவ்வொரு அண்டை நாடுகளிலிருந்தும் இந்தியாவுக்கு கூட்டமாக நிறைய பேர் வருகிறார்கள் என்று மத்திய அரசு சார்பாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் அகதிகளை இந்தியாவிற்குள் அனுமதிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், இதைவிட மிகப்பெரிய பிரச்சனைகள் இருப்பதால் இதில் முடிவெடுக்க வேண்டியது அவசரமல்ல என்று மத்திய அரசு சார்பாக விளக்கமளிக்கப்பட்டது. மேலும் இதில் உச்சநீதிமன்றம் தலையிடுமளவுக்கான பெரிய விஷயம் அல்ல என்றும் அரசு சார்பாக வாதிடப்பட்டது. இதனையடுத்து அடுத்த வழக்கு விசாரணை மார்ச் 7-ம் தேதியன்று நடைபெறும் போது இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க உச்சநீதிமன்ற அமர்வு அவகாசம் அளித்தது.
இந்நிலையில் இந்தியாவில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் படுமோசமான சூழ்நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், மரணத்திற்கான வாயிலில் மீண்டும் அவர்களை அனுப்புவது கொடுஞ்செயல் என்றும் அவர்களுக்கு ஆதரவாக பிரசாந்த் பூஷன் வாதிட்டதையும் நீதிபதிகள் பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.