இந்தியா இந்து நாடு: ஆர்.எஸ்.எஸ். தலைவர் சர்ச்சைப் பேச்சு
கொல்கத்தா: இந்தியா ஒரு இந்து நாடு என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த இந்து சம்மேளன நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
நாம் அனைவரும் வலுவான இந்து சமுதாயம் அமைய முயற்சி செய்கிறோம். வெளியேறியவர்கள் அவர்களாக செல்லவில்லை. அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். திருடனை பிடித்து எனது பொருளை மீட்டப் பிறகு அந்த பொருளை நான் திரும்பப் பெறுவதில் என்ன புதுமை உள்ளது?
மீண்டும் இந்து மதத்திற்கு மாறுவதை விரும்பாவிட்டால் அதற்கு தடை விதித்து சட்டம் கொண்டு வாருங்கள். ஆனால் உங்களுக்கு சட்டம் கொண்டு வர விருப்பம் இல்லை. நீங்கள் இந்துவாக மாற விரும்பாவிட்டால் இந்துக்களை நீங்கள் மதம் மாறச் செய்யாதீர்கள்.
நாம் பயப்படத் தேவையில்லை. நாம் நமது நாட்டில் உள்ளோம். நாம் ஒன்றும் நாட்டுக்குள் ஊடுருவியவர்கள் அல்ல. இது நம் இந்து நாடு. ஒரு இந்து தனது நாட்டை விட்டுச் செல்ல மாட்டான். நாங்கள் இழந்ததை திரும்பப் பெற முயற்சி செய்கிறோம். இதை பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். இந்துக்கள் தலை தூக்குவதை பார்த்து அதற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் சுயநலவாதிகள்.
வங்கதேசம் அல்லது பாகிஸ்தான் செய்யும் குற்றங்களை எல்லாம் இந்துக்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். 100 குற்றங்களுக்கு பிறகு இந்துக்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ள வேண்டாம் என் எங்கள் கடவுள் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானும் ஒரு காலத்தில் இந்தியாவுடன் இருந்தது. பிரிந்து சென்ற பிறகு அங்கு இந்துக்கள் அவ்வளவாக இல்லாததால் தான் பாகிஸ்தானில் அமைதியாக வாழ முடியவில்லை.
உலகம் மேம்பட வலுவான இந்து சமுதாயம் தேவை என்றார்.