ஜனநாயக நாடான இந்தியா.. பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது.. கனிமொழி போட்ட பரபரப்பு டுவிட்
டெல்லி: ஜனநாயக முறையில் சிறந்து விளங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்தங்கியிருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என்று விமர்சித்துள்ளார்.
ஜனநாயக முறையில் சிறந்து விளங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா இந்த ஆண்டு 51வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 10 ஆண்டுகள் பின் தங்கி இருக்கிறது. தி இகனாமிஸ்ட் இண்டெலிஜென்ஸ் யூனிட் அமைப்பு 2019 ஆம் ஆண்டுக்கான ஜனநாயகக் குறியீடு பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் அரசியல் அமைப்புகள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு 2019ம் ஆண்டுக்கான பட்டியலை தி இகனாமிஸ்ட் இண்டெலிஜென்ஸ் யூனிட் அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா 2018-ல் இந்தக் குறியீட்டில் 7.23 புள்ளிகளுடன் 41 ஆவது இடத்தில் இருந்தது. இந்த சூழலில் 2019 ஆம் ஆண்டில் 6.90 புள்ளிகளுடன் 10 இடங்கள் சரிந்து 51 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது. . இந்த பட்டியலில் நார்வே, ஐஸ்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. வடகொரியா கடைசி இடத்தை பிடித்திருக்கிறது
இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில். "உலக ஜனநாயக குறியீட்டில், இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்கள் கீழிறங்கியிருப்பது, இந்தியாவில் உரிமைகள் எப்படி பறிக்கப்பட்டு வருகின்றன என்பதை உணர்த்துகிறது. ஒரு வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது"
உலக ஜனநாயக குறியீட்டில், இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்கள் கீழிறங்கியிருப்பது, இந்தியாவில் உரிமைகள் எப்படி பறிக்கப்பட்டு வருகின்றன என்பதை உணர்த்துகிறது. ஒரு வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 23, 2020