இந்தியா, இஸ்லாமுக்கு எதிரான நாடு என்பதால் தாக்குதல் நடத்தினோம்: ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம்
மும்பை: இந்தியா, இஸ்லாமுக்கு எதிரான நாடு என்பதால் அதன் மீது தாக்குதல் நடத்தினேன் என்று மும்பை தொடர் தாக்குதலின் சூத்திரதாரி, டேவிட் ஹெட்லி, மும்பை நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மும்பை 26/11 தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய கசாப் உயிரோடு பிடிபட்டு தூக்கிலிடப்பட்ட நிலையில், தாக்குதலின் சூத்திரதாரி டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் வேறு ஒரு வழக்கில் பிடிபட்டார். விசாரணையின்போது, மும்பை தாக்குதலின் மூளையாக ஹெட்லி செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அமெரிக்காவில், பெயர் தெரிவிக்கப்படாத இடத்தில் இருந்தபடி, மும்பை நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைக்கு, வீடியோ கான்பரன்ஸ் மூலமாக, ஹெட்லி இன்று நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதியின் கேள்விகளுக்கு ஹெட்லி பதிலளித்தார். இந்திய நேரப்படி காலை 7.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை வீடியோ கான்பரன்சில் விசாரணை நடைபெற்றது..
ஜிகாத் குறித்த நீதிபதியின் ஒரு கேள்விக்கு ஹெட்லி அளித்த பதில் விவரம் இது: ஜிகாத் என்பது இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானவர்களுக்கு எதிரான போர். இந்தியா, இஸ்லாமின் எதிரி. காஷ்மீருக்காக போர் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம். லஷ்கர் இ-தொய்பா தலைவன் ஜகி-உர்-ரகுமான் லக்வி எனது வயது முதிர்வை கருத்தில்கொண்டு, தீவிரவாத பயிற்சி எடுப்பது உங்களுக்கு கஷ்டம் என தெரிவித்தார். ஆனால் நானோ பயிற்சி எடுக்க ஆர்வம் காட்டினேன்.
லஷ்கர் தீவிரவாதிகளின் 5 ராணுவ பயிற்சி மையங்களுக்கு நான் சென்றுள்ளேன். இவ்வாறு ஹெட்லி தெரிவித்துள்ளார்.