இந்தியா, இஸ்ரேல் உளவுப் படைகளுக்கு பாகிஸ்தானில் இருந்தபடி தண்ணி காட்டும் தீவிரவாதி சஜித் மிர்!
டெல்லி: இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து, தேடிவரும் சஜித் மிர் (அல்லது) சஜீத் மஜீத் என்ற லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதியை, பத்திரமாக பாதுகாத்து வருவதில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ வெற்றிபெற்று வருகிறது.
மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சஜீத் மிர், பாகிஸ்தானுக்குள்ளேயே பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி இரவு பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் மும்பைக்குள் ஊடுருவி ரயில் நிலையம், தாஜ் ஹோட்டல் உள்பட முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தினார்கள். கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டனர். வெடிகுண்டுகளையும் வீசினார்கள். இதில் அப்பாவி மக்கள் 166 பேர் பலியானார்கள்.
பிடிபட்ட கசாப்
தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டான். இந்த சம்பவத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. ஆனால் அந்த தாக்குதலிலுக்கு மூளையாக இருந்த சஜித் மிர் குறித்த தகவல் அப்போது வெளியாகவில்லை.
டேவிட் ஹெட்லி தகவல்
மும்பை சம்பவத்திற்கு பிறகு ஒரு வருடம் கழித்து, அமெரிக்காவில் கைதான டேவிட் ஹெட்லி என்ற தீவிரவாதியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போதுதான் சஜித் மிர் பெயர் வெளியில் வந்தது.
இஸ்ரேல் உதவி
இதையடுத்து சஜீத் மிர் மீது, இந்திய உளவுத்துறையின் கண்காணிப்பை துவக்க முற்பட்டது. ஆயினும், அவரது நடவடிக்கைகள் மர்மமாகவே உள்ளன. இருப்பினும் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட், சில தகவல்களை இந்தியாவுக்கு அளித்தது.
கராச்சி தாக்குதலில் தொடர்பு
சஜீத் மிர் லாகூர் நகரின் அருகேயுள்ள முர்டிகே என்ற பகுதியில் அவரது வீட்டில் தங்கியிருப்பதாகவும், பாகிஸ்தானைவிட்டு அவர் வெளியேறவில்லை என்றும் மொசாட் தெரிவித்தது. கராச்சியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் மிர் மூளையாக செயல்பட்டுள்ளான்.
வளைகுடாவுக்கு தப்பவில்லை
மும்பை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுக்கு எதிரான பன்னாட்டு நெருக்கடி எழுந்தது. வழக்கமாக இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்படும்போதெல்லாம், சம்மந்தப்பட்ட தீவிரவாதிகளை வளைகுடா பிராந்தியத்திலுள்ள தனது நட்பு நாடுகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அனுப்பி வைத்துவிடும். ஆனால், மிர் பிரச்சினையில் பாகிஸ்தான் அவ்வாறு செய்யவில்லை.
பாகிஸ்தானுக்கு பயம்
இதற்கு காரணம், மும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு ஹிந்தி கற்றுக்கொடுத்த அபு ஜுன்டால் என்ற தீவிரவாதியை, வளைகுடா நாட்டில் வைத்து இந்தியா கைது செய்தது. எனவே சஜீத் மிர்ரும் அதேபோல சிக்கிக்கொள்ள கூடும் என்பதால் இதுவரை பாகிஸ்தானை விட்டு வெளியேற்றாமல் பாதுகாப்பு கொடுத்துவருகிறது ஐஎஸ்ஐ.