ஏகப்பட்ட முதலீடுகளுடன் வர உள்ள புல்லட் ரயில் திட்டம் வரமா, சாபமா?
டெல்லி: ஜப்பான் நாட்டுடன் இணைந்து மும்பை-அகமதாபாத் நடுவே புல்லட் ரயில் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கு வரவேற்பு ஒருபக்கம் எனில், ஏழைகள் வாழும் நாட்டில் புல்லட் ரயில் அவசியமா என்ற கேள்வி பல தரப்புகளில் இருந்து எழுகிறது.
உண்மையிலேயே இது வீண் செலவீனமா? அல்லது, எதிர்கால இந்தியாவுக்கு தேவையான ஒன்றுதானா என்பதை சில தரவுகள் அடிப்படையில் பார்க்கலாம்..
புல்லட் ரயில் திட்டம் என்பது, குறுகிய நோக்கத்தோடு பார்க்க கூடாத திட்டங்களில் ஒன்று. அந்த திட்டம் மேலும் பல ரயில் திட்டங்களுக்கு வித்திடக்கூடியது. ரயில்வேயில் பாதுகாப்பு, திறன் வளர்ப்பு போன்றவற்றுக்கு உதவ கூடியது. இந்த சிறு அடியெடுப்பு, பல்வேறு வருங்கால நலன்களுக்கான வாசலை திறந்துவிடும்.
போக்குவரத்தின் முதுகெலும்பு
இந்திய ரயில்வே, நெட்வொர்க் மொத்தம், 65,806 கிலோ மீட்டர் தூர இருப்பு பாதையை கொண்டது. நாட்டின் போக்குவரத்தில் முதுகெலும்பை போன்றது ரயில்வே. சில வழித்தடங்களில் 150 சதவீதம் ரயில் பயன்பாடு உள்ளது. அதிகப்படியான பயணிகள் கூட்டம், பயணிகள் ரயில் மற்றும், சரக்கு ரயில்களின் பயண வேகத்தை குறைத்துள்ளது. இதனால், சாலை மற்றும் விமான சேவைகளை நோக்கி பல பயணிகள் நகர தொடங்கியுள்ளனர்.
மாசற்ற பயணம்
விமானம், மற்றும் சாலை போக்குவரத்தை ஒப்பிட்டால், சுற்றுச்சூழலுக்கு மாசு குறைந்த போக்குவரத்து ரயில்தான். சரக்குகள் சென்றடையும் நேரம் அதிகரிப்பதால், தொழில் வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
பொருளாதாரம்
ரயில்வேயின் வளர்ச்சி என்பது மறைமுகமாக நமது நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான அச்சாணியாகும். மேலும், புல்லட் ரயில் இயங்குவதும், அதற்கான உபகரணங்களை நாமே தயாரிப்பதும், இயல்பாகவே இந்திய தொழில் துறையினரிடம் தன்னம்பிக்கையை உயர்த்தும். இந்த தன்னம்பிக்கை, பிற துறைகளுக்கும் பரவும்.
லாபம்
ஜப்பான் நாடு, மும்பை-அகமதாபாத் இடையேயான ரயில் சேவைக்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளது. அதுவும் மிக அதிக சலுகைகளுடன்தான் பண உதவியை அளித்துள்ளது. பணத்தை திருப்பித்தர 50 வருட காலம் காலக்கெடு கொடுத்துள்ளதோடு, முதல் 15 ஆண்டுகளுக்கு, வட்டியில்லாமலும், பிறகு, 0.1 சதவீத வட்டியும் வசூலிக்கப்படும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. விலைவாசி ஏற்றத்தை ஒப்பிட்டு பார்த்தால், இந்த நிதி இந்தியாவுக்கு பெரும் லாபத்தையே பெற்றுத்தரும்.
ஜப்பான் முன்னோடி
ஜப்பான் நாட்டில் 1964ம் ஆண்டிலும், பிரான்சில் 1981லும், இத்தாலியில் 1989லும், ஜெர்மனியில் 1991ம் ஆண்டிலும், ஸ்பெயினில் 1992வது ஆண்டிலும், பெல்ஜியத்தில் 1997லிலும் அதிவிரைவு ரயில் சேவை ஆரம்பித்தாகிவிட்டது.
ஜப்பான் கூட்டு
கடந்த 50 வருடங்களாக இந்தியாவால், விரைவு ரயில் சேவையை தர முடியவில்லை. இத்திட்டத்தின் முன்னோடியான ஜப்பானுடன் இந்தியா கைகோர்த்து தற்போதுதான், திட்டத்தை கொண்டுவர உள்ளது. இந்திய ரயில்வேயின் வடிவத்தை இந்த திட்டம் மாற்றியமைக்கும்.
செலவு கம்மி
புல்லட் ரயிலின் திட்ட செலவு, ஒரு கி.மீக்கு, ரூ.140 கோடி என்ற அளவிலுள்ளது. இது ரொம்ப அதிகமாச்சே என நினைக்கிறீர்களா. விஜயவாடாவில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் பாதைக்கு 1 கி.மீக்கு ஆன தொகை எவ்வளவு தெரியுமா? ரூ.288 கோடி. டெல்லி மெட்ரோ ரயிலுக்கு ரூ.175 கோடி செலவானது.
வட்டியும் கம்மி
ஜப்பான் பேங்க் ஆப் இன்டர்நேஷனல் கோ-ஆபரேசன் டெல்லி மெட்ரோவுக்கான 60 சதவீத நிதியை அளித்திருந்தது. 1997ல் போடப்பட்ட அந்த ஒப்பந்தப்படி வட்டி 1.2 சதவீதமாகும். 30 வருடங்களில் பணத்தை திருப்பி தர வேண்டும். அதோடு ஒப்பிட்டால், புல்லட் ரயிலுக்கு போடப்பட்ட ஒப்பந்தம் இந்தியாவுக்கு எவ்வளவோ லாபம்தான்.
மேக் இன் இந்தியாவுக்கு பலன்
2023ம் ஆண்டு, 1 கோடியே 30 லட்சம் பேர் புல்லட் ரயிலில் பயணிப்பார்கள் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2023ல் இது, 6 கோடியே 80 லட்சமாக உயருமாம். புல்லட் ரயில் திட்டத்தால், மேக் இன் இந்தியா திட்டத்திற்கும் உந்து சக்தி கிடைத்தது போலவாகும். உபகரணங்கள், இயந்திரங்கள் போன்றவற்றை தயாரிக்கும் வாய்ப்பு இந்தியாவிற்குள்ளேயே ஏற்படுத்தப்படும்.
தரத்தில் நோ காம்ப்ரமைஸ்
புல்லட் ரயில் திட்டத்திற்காக ஜப்பானுடன் இந்தியா கைகோர்க்க முக்கிய காரணம், குஜராத் முதல்வராக இருந்தபோதில் இருந்தே, ஜப்பானுடன் மோடி, நல்ல நட்புறவையும், தொழில் முறை தொடர்பையும் பேணி வந்ததுதான். இதில் மக்களுக்கு கிடைக்கும் நன்மை என்பது பாதுகாப்பு. ஜப்பான் தொழில்நுட்பம் பாதுகாப்புக்கு பெயர் பெற்றது. ஜப்பானியர்கள் தரத்தில் சமரசம் செய்ய மாட்டார்கள்.
பங்ச்சுவாலிட்டி
ஜப்பான் ரயில்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்படுவதில் உலக பிரசித்தி பெற்றவை., அந்த நாட்டு ரயில்களின் சராசரி காலதாமதம் என்பது 1 நிமிடத்திற்கு உள்தான். நில நடுக்கம் போன்ற பேரிடர் சமயங்களில், ரயிலை தானாக நிறுத்திவிடும் தொழில்நுட்பமும் ஜப்பானிடம் உள்ளதாம். இந்த அனுகூலங்களை வைத்து பாக்கும்போது, புல்லட் ரயில் திட்டம் ஒரு வரம் என்பது புரியும்.