மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரயில்.. இந்தியா-ஜப்பான் இடையே ஒப்பந்தம் கையெழுத்து!
டெல்லி: இந்தியா மற்றும் ஜப்பான் இடையே, ஆக்கப்பூர்வ அணு சக்தி தொடர்பான ஒப்பந்தம், இரு நாட்டு பிரதமர்கள் முன்னிலையில் டெல்லியில் இன்று கையெழுத்தானது. அதேபோல, மும்பை-அகமதாபாத் நடுவே புல்லட் ரயில் திட்டம் கொண்டுவரவும் இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
"இந்தியாவின் பொருளாதார கனவுகளை ஜப்பானைவிட உணர்ந்து கொண்ட நாடு வேறு இருக்க முடியாது" என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு பிரதமர் மோடி தெரிவித்தார்.
"ஜப்பான் நாட்டின் தனியார் முதலீடுகள் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. சின்சோ அபே (ஜப்பான் பிரதமர்) இந்தியாவின் பொருளாதார முன்னெடுப்புகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். நாங்கள் இரு நாட்டு உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்" என்றும் மோடி கூறினார்.
இவ்விரு தலைவர்களும், பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு செய்வது, பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மும்பை- அகமதாபாத் இடையே ரூ.98 ஆயிரம் கோடி செலவில் புல்லெட் ரயில் திட்டம், மார்ச் 1ம் தேதி முதல் ஜப்பானியார்களுக்கு வருகையின் போது விசா வசதி ஆகிய ஒப்பந்தங்களும் கையெழுத்தானது.
மோடி கூறுகையில், புல்லட் ரயில் ஒப்பந்தம் இந்தியா ரயில்வேயில் பரிணாம வளர்ச்சி தொடங்கியுள்ளது. 508 கி.மீட்டர் தொலைவு கொண்ட இந்த பாதையில் வழக்கமான 8 மணி நேரம் பயண நேரம், புல்லட் ரயிலால், 3 மணி நேரமாக குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது, என்றார்.
ஜப்பான் பிரதமர் சின்சோ அபே பேசுகையில், இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவ ஜப்பானின் அரசு தனியார் துறைகள் இணைந்து செயல்படும். இருநாட்டு உறவை புதிய கட்டத்துக்கு எடுத்துச்சென்றுள்ளோம் என்றார்.