அமெரிக்கா, இங்கிலாந்து.. எந்தெந்த நாடுகளில் ஓரினச் சேர்க்கை திருமணம் குற்றமில்லை தெரியுமா?
Recommended Video
டெல்லி: ஓரினச்சேர்க்கையை குற்றம் என அறிவிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், ஏற்கெனவே 27 நாடுகளில் ஓரினச் சேர்க்கை என்பது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த ஒரு பார்வை:
நெதர்லாந்தில் 2000மாவது ஆண்டு ஓரினச் சேர்க்கை திருமணம் என்பது அங்கீகரிக்கப்பட்டது. உலகிலேயே முதல் முறையாக ஓரினச்சேர்க்கையை அங்கீகரித்த நாடு நெதர்லாந்து.
2001 ஆம் ஆண்டில் அந்த நாட்டின் நான்கு ஓரினச்சேர்க்கை ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். உலகில் முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்ட ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் என்று இது பார்க்கப்படுகிறது.
பெல்ஜியம் நாட்டில் 2003 ஆம் ஆண்டு இதுபோன்ற சட்டம் இயற்றப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் கனடா நாட்டில் ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு, அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டில் ஸ்பெயின், 2006 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா, 2008 ஆம் ஆண்டில் நார்வே நாடுகள் இதுபோன்ற சட்டத்திற்கு அங்கீகாரம் அளித்தன.
நார்வேயில் 2009ஆம் ஆண்டில் அந்த நாட்டின் புகழ்பெற்ற, லூதரன் சர்ச், பாதிரியார்கள் ஓரினச்சேர்க்கை திருமணம் செய்துகொள்ள அங்கீகாரம் அளித்தது. மத அடிப்படையில் இது தவறு என்றாலும் கூட என்பது கவனிக்கத்தக்கது.
2009 ஆம் ஆண்டில் ஸ்வீடன், 2010ஆம் ஆண்டில் அர்ஜென்டினா நாடுகள் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் அளித்தன. லத்தீன் அமெரிக்க நாட்டில் இதுபோன்ற சட்டத்தை இயற்றிய முதல் நாடு என்ற பெயரை அர்ஜென்டினா பெற்றது.
2010ஆம் ஆண்டு போர்ச்சுகல், ஐஸ்லாந்து நாடுகளிலும் இது போன்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. 2012ஆம் ஆண்டு டென்மார்க்கிலும், 2013ஆம் ஆண்டு உருகுவே, பிரேசில், நியூசிலாந்து, இங்கிலாந்து வேல்ஸ், பிரான்ஸ் ஆகிய முக்கியமான நாடுகளில் இந்த சட்டம் அமலுக்கு வந்தது.
2014ஆம் ஆண்டு லக்சம்பர்க், 2014ல் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளிலும் ஓரினச்சேர்க்கை சட்டம் அமலுக்கு வந்தது. 2015ஆம் ஆண்டு உலகின் பெரிய அண்ணன் அமெரிக்காவிலும் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. #LoveWins என்ற ஹேஷ்டேக் அப்போது உலகமெங்கும் டிரெண்ட் ஆனது.
இதேபோன்று 2015ஆம் ஆண்டு அயர்லாந்து, பின்லாந்து, கிரீன்லாந்து ஆகிய நாடுகளிலும், 2016 ஆம் ஆண்டு கொலம்பியா நாட்டிலும், 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.