பாலஸ்தீனத்தை ஐ.நா.வில் அங்கீகரிக்காது- வெளியுறவுக் கொள்கையில் தலைகீழ் மாற்றம்?
டெல்லி: ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கக் கோருகிற ஜோர்டானின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தை இந்தியா பல ஆண்டுகாலமாக ஆதரித்து வருகிறது. ஐ.நா. உட்பட சர்வதேச அரங்குகளிலும் இந்தியா இதே நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்த பின்னர் மெல்ல மெல்ல இந்த நிலைப்பாட்டில் மாற்றம் வந்தது. பாலஸ்தீனத்தை ஆதரிக்காமல் இஸ்ரேலுடன் நட்பு பாராட்டத் தொடங்கியது மத்திய அரசு.
ஆதரித்த இந்தியா
இந்த ஊசலாட்ட நிலைக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் வேறுவழியின்றி பாலஸ்தீனத்தின் காஸா மீது கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் நடத்திய இனப்படுகொலை தாக்குதலுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க நேரிட்டது.
ஜோர்டான் தீர்மானம்
தற்போது பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய குடியிருப்புகள் விலக்கப்பட வேண்டும்; கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று அரபுநாடுகள், ஐரோப்பிய நாடுகள் ஆதரவுடன் ஜோர்டான் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்துள்ளது.
இந்தியா ஆப்சென்ட்?
இந்த தீர்மானத்துக்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும் போது, பாலஸ்தீனத்தை ஆதரிக்காமல் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
விடுவார்களா எதிர்க்கட்சிகள்?
இதுநாள் வரை பாலஸ்தீனத்தை ஆதரித்து வந்த இந்திய வெளியுறவுக் கொள்கை இப்படி தலைகீழாக மாறுவதை எதிர்க்கட்சிகள் அனுமதிக்காது என்றே கூறப்படுகிறது.