இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமுக்கு அங்கீகாரம்.. அமெரிக்கா முடிவுக்கு இந்தியா தலையாட்டாது!
டெல்லி: ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்க அரசின் முடிவுக்கு, இந்தியா ஒத்துழைக்கப்போவதில்லை என்று தெரிகிறது.
இஸ்ரேல் நாடு ஆக்கிரமிப்பு செய்துள்ல ஜெருசலேம் நகரையே தலைநகராக அறிவித்துக்கொண்டுள்ளது. உலக நாடுகள் இதை அங்கீகரிக்காத நிலையில், ரஷ்யாவை தொடர்ந்து இப்போது அமெரிக்கா, ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகராக ஏற்றுக்கொண்டுள்ளது.
ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய இந்தியாவின் இரு நட்பு நாடுகள், இம்முடிவை எடுத்திருந்தாலும், இந்தியா இதற்கு ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்று தெரிகிறது.
"இந்தியாவின் பாலஸ்தீனம் குறித்த பார்வை சுதந்திரமானது, தொடர்ந்து ஒரே மாதிரியானது. இந்தியாவின் கொள்கைகள், நலன்கள் சார்ந்துதான் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. இதில் மூன்றாம் நாடு தலையிட முடியாது" என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ்குமார் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரியில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியா வர உள்ள நிலையில், இந்தியா இந்த முடிவை வெளிப்படையாக அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா எப்போதுமே பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டில்தான் உள்ளது. இஸ்ரேலுடன் ராஜாங்க உறவை இந்தியா துவங்கியது 1992ல்தான்.