சோதனைக்காக இஸ்ரேலுக்குப் போன இந்திய ஏவுகணைகள்.. ஒரு மாதமாக கொரியாவில் தேங்கிக் கிடக்கிறது!
டெல்லி: இந்தியாவின் நீண்ட தூர தரையிலிருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் வல்லமை படைத்த ஏவுகணைகள் பரிசோதனைக்காக இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு காஸா போர் உக்கிரமடைந்துள்ளதால், தற்போது தென் கொரியாவில் கடந்த ஒரு மாதமாக முடங்கிக் கிடக்கிறதாம்.
மொத்தம் நான்கு LR- SAM ஏவுகணைகளை இந்தியா அனுப்பி வைத்தது. ஆனால் காஸா போர் காரணமாக இஸ்ரேலுக்கு இதை அனுப்ப முடியவில்லை. இதனால் தென் கொரியாவில் இந்த ஏவுகணைகளை பத்திரமாக வைத்துள்ளது இந்தியா.
இந்தியாவின் டிஆர்டிஓவும், இஸ்ரேலின் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இணைந்து இந்த ஏவுகணைகளை தயாரித்துள்ளன. நான்கு ஏவுகணைகளைத் தயாரித்து பரிசோதனைக்காக கடந்த மாதம் இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தனர்.
சியோல் சென்ற ஏவுகணைகள்
கடந்த ஜூலை மாதம் தென் கொரிய ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இந்த ஏவுகணைகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் சியோல் சென்றடைந்த நிலையில் காஸாவில் ஜூலை 8ம் தேதி போர் வெடித்தது. இஸ்ரேலின் வெறித் தாக்குதல் தொடங்கியது.
வெடித்தது காஸா போர்
இதையடுத்து சியோல் நகரிலிருந்து டெல் அவிவ் நகருக்கான அனைத்து விமான சேவைகளையும் தென் கொரிய அரசு ரத்து செய்து விட்டது. இதனால் இந்திய ஏவுணைகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
முடக்கம்
இதன் காரணமாக கடந்த ஒரு மாதமாக இந்த ஏவுகணைகள் சியோலிலேயே முடங்கிப் போயுள்ளன. இதை எப்படி இஸ்ரேலுக்கு அனுப்பி வைப்பது என்பது குறித்து இந்திய அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.
தாமதம்
நான்கு - ஐந்து மாதங்களுக்கு முன்பே இந்த ஏவுகணைகளை சோதித்துப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் தாமதம் காரணமாக அதைத் தயாரித்து முடிக்க தாதமாகி விட்டது.
காத்திருக்கும் டிஆர்டிஓ
இந்த ஏவுகணைகள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் பொறுத்துத்தான் அடுத்தடுத்து இந்த ரக ஏவுகணைகளைத் தயாரிக்க டிஆர்டிஓ திட்டமிட்டுள்ளது.